அமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்
கோவை: எந்த நேரத்திலும் டிடிவி தினகரன் கட்சியை கலைப்பார். தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். அவர் தனது எம்எல்ஏ பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போட்டி அமமுக வலியுறுத்தி உள்ளது. பெங்களூரு புகழேந்தி தலைமையில் கோவை மண்டல அமமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமமுகவில் டிடிவி தினகரன் மேல் அதிருப்தியில் உள்ள புகழேந்தி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், " டிடிவி தினகரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆர்கே நகர் எம்எல்ஏ பதவியில் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. டிடிவி தினகரன் கட்சியை நாசம் செய்துவிட்டார்.
எதிர்காலம் கேள்விக்குறி
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அறிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது. எம்எல்ஏ பதவியை இழந்தவர்கள் எதிர்காலம் தினகரனால் கேள்விக்குறியாகி உள்ளது. எம்எல்ஏக்கள் ராஜினாமாவை எதிர்த்து தினகரன் வழக்கு தொடர் மறுத்துவிட்டார். 18 எம்எல்ஏக்கள் பதவி இழக்க காரணம் ஆகிவிட்டார்.
தோல்வி அடைந்துவிட்டோம்
கட்சியும் ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே போராடினோம். தோல்வி அடைந்துவிட்டோம். இனி கட்சி ஆட்சியை மீட்டெடுக்க முடியாது. அது கஷ்டமாக இருக்கும்.
ஏன் பாராட்டினேன் நான்
நதிநீர் பிரச்சனையில் கேரளா போய் முதல்வர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்று தான் கூறினேன். அன்றைக்கு உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று அன்றைக்கு அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) கர்நாடகா வந்தாங்க. அன்றைக்கு நான் தான் அழைத்து சென்றேன். அன்றைக்கு அமைச்சர்களுடன் பேசினார். அதேவழியில் முதல்வர் பழனிச்சாமி கேரளா சென்று இருப்பது வரவேற்கத்தக்கது என்றுதான் கூறினேன்.
புகழேந்தி நம்பிக்கை
சின்னம்மா (சசிகலா) தியாகத்தலைவி அவரிடத்திலே எப்போதும் மரியாதையும் அன்பும் உண்டு. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், பழகிய காலத்தில் இருந்து சொல்கிறேன். எந்த இடத்திலும் அவர்கள் தாக்கி பேசியது இல்லை. சிறையில் பலமுறை அவரை சந்தித்து இருக்கிறேன். தாக்கி பேசியது இல்லை. அன்றைக்கு ஜானகி அம்மா அவர்கள் அம்மாவிடம் கட்சியை ஒப்படைத்து அவரே கட்சியை நடத்தட்டும் என்று சொன்ன கடிதத்தை பெற்றுவந்தவர் சசிகலா. அன்றைக்கு மட்டும் அவர் அந்த காரியத்தை செய்யாமல் போயிருந்தால் , பிரச்சைனைக்கு தீர்வே வந்திருக்காது. அதேபோல் இந்த அரசை ஆதரிக்கும் முடிவினைத்தான் சசிகலா எடுப்பார் என்று நான் நம்புகிறேன், நினைக்கிறேன்.
எங்களிடம் ஆயுதம்
ஏன் என்று கேட்கிறுர்களா.. திருச்சி கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசும் போது நிராயுதபாணியாக நிற்கிறோம் என்றார். நான் சொன்னேன் நாங்கள் நிராயுத பாணிகள் இல்லை. ஆட்சி இல்லை. அதிகாரம் இல்லை. கட்சி இல்லை, சின்னம் இல்லை. எதுவும் இல்லை, இந்த போர்க்களத்தில்.. ஆனால் எங்களிடத்திலே ஒரே ஒரு ஆயுதம் இருக்கிறது. அதுதான் டிடிவி தினகரன். அதைவைத்து நாங்கள் மாபெரும் வெற்றியை பெறுவோம் என்று சொன்னேன். தினகரனை முதல்வர் என்று கூறினேன்.
இரண்டுபேர் தான் இருப்பாங்க
அப்படி சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். எவ்வளவு வேதனையில் இருக்கிறேன். தெரியுமா வெளியில் சொல்ல முடியவில்லை. தினகரன் பயங்கரமான ஆள். டிடிவி தினகரனை போன்ற வஞசகம் மிக்க தலைவனை பார்த்தது இல்லை. யாரோ அமைச்சர் சொன்னது போலே, சிரித்துக்கொண்ட இருப்பார். பின்னர் என்ன செய்வார் என்று தெரியாது. இன்று சொல்கிறேன் அமமுக கட்சியில் இருந்து முக்கால்வாசி பேர் வெளியோ போகிறார்கள். நாஞ்சில் சம்பத் சொன்னது போல் டிடிவி தினகரன் மற்றும் ஜனா இரண்டே பேர் தான் இருக்க போகிறார்கள்.
தேர்தல் செலவு பிரச்சனை
தேர்தலில் செலவு செய்த தொகை தொடர்பாக ஆதாரம் இருக்கிறது. நேரம் வரும் போது சொல்கிறேன். 16 பாய்ண்டிலும் ஒரே சப்ஜெக்ட் பேசக்கூடிய தலைவர் டிடிவி தினகரன் தான். அவருக்கு சப்ஜெக்ட் தெரியாது. தேர்தல் செலவு பிரச்சனையால் டிடிவி மீட்டிங் போடுகிறார். எந்த நேரத்திலும் தினகரன் கட்சியை கலைத்துவிடுவார்" என்றார்.