சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
கோவை: மலிவு விலையில் உணவகம், மருந்தகம், மருத்துவமனை நடத்தி வந்த கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குறைந்த விலையில் உணவகம் நடத்தி பலரது பசியை தீர்த்த கோவை சாந்தி கேண்டீன் மற்றும் சாந்தி சோசியல் சர்வீஸ் சேர்மன் சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். 10 ரூபாய்க்கு சாப்பாடும், 5 ரூபாய்க்கு டிபனும் கொடுத்து பல ஆண்டுகள் சேவை செய்தவர் சுப்ரமணியம். இவர் லாப நோக்கம் இன்றி உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை சேவையாக செய்தார். தினமும் இவரது கேண்டீனில் 15 ஆயிரம் பேர் பசியாறி வருகிறார்கள். மலிவு விலை மருந்தகம், மருத்துவமனையில் பலன் அடைந்தவர்கள் எண்ணில் அடங்காதவை.
சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்ரமணியம் மறைவு - இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்
தன்னலமற்ற சுப்ரமணியத்தின் சேவையை நினைவுகூர்ந்து தமிழகம் முழுவதும் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தொழில்முனைவோராக உச்சம் தொட்ட பின் மலிவு விலை உணவகம் - மருத்துவமனை - கல்வி உதவிகள் - ஸ்டாக் விலைக்கே பெட்ரோல்- டீசல் விற்பனை என சமூகத்துக்கும் திருப்பி தந்த கோவை பெரியவர் சாந்தி கியர்ஸ் திரு.சுப்பிரமணியம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.