'பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாங்க'.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
கோவை: 'பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாங்க, டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள்' என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
முன்னதாக நாளை முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து தனது வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த புகைப்படத்தையும் வானதி சீனிவாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10 தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், 35 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறப்பு
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் 27 மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கடும் கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
கொரோனா பெருந்தொற்று காரணமாக வரிவருவாய் குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மதுக்கடைகளை தமிழக அரசு கட்டுப்பாடுகள் திறக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வீடுகள் முன்பு போராட்டம்
பாஜக ஒருபடி மேலேபோய் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காலம் என்பதால் வீடுகள் முன்பு பாதகை ஏந்தி தங்கள் எதிர்ப்பை பாஜக தலைவர்கள் பதிவு செய்துள்ளனர். எல் முருகன், ஹெச் ராஜா, கே.டி.ராகவன், நாராயணன், உள்பட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திறக்க வேண்டாம்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், இன்று தனது வீட்டின் முன்பு 'தமிழக அரசே டாஸ்மாக்கை திறக்காத' என்ற பதாகை ஏந்தி மதுக்கடை திறப்பு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாங்க, டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.