செய்யோணும்.. பண்ணோணும்.. வளர்த்தோமுங்கோ.. கொங்கு தமிழில் வெள்ளந்தியாக பேசும் வானதியின் தாய்!
கோவை: பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசனின் தாயார் பூவாத்தாள்,கொஞ்சும் கொங்கு தமிழில் தனது மகள் குறித்து விவரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வானதி ஸ்ரீனிவாசனின் தாய் பூவாத்தாள் கூறுகையில், நான் வானதியின் அம்மா. அவர் சிறிய குழந்தையாக இருந்தது முதல் பள்ளியில் ஆர்வமாக படித்து வந்தவர்.
துருதுருவென இருப்பார். குழந்தையிலிருந்தே நாட்டின் மீது பற்று அதிகம். எங்கள் கிராமத்தில் இருந்து வானதி படித்த பள்ளி வெகு தூரம் என்பதால் ஒரு பெண் பிள்ளையை எதற்காக அவ்வளவு தூரம் கொண்டு போய் படிக்க வைக்கிறீர்கள் என எங்கள் உறவினர்கள் கேட்டார்கள்.
சட்டக் கல்லூரி
அதையும் மீறி வானதியை அவரது அப்பா சட்டக் கல்லூரியில் படிக்க வைத்தார். அங்கும் வானதிக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போது அந்த கல்லூரியின் முதல்வர் வானதியின் அப்பாவை வரவழைத்து உங்கள் பெண்ணை அழைத்து சென்றுவிடுங்கள்.
வானதி
இங்கு நியாயத்திற்காக போராடி பிரச்சினை செய்கிறார் என்றார். ஆனால் வானதியின் அப்பாவோ அதெல்லாம் முடியாது. அவர் நிச்சயம் இந்த கல்லூரியில் படிக்கத்தான் வேண்டும். அவர் நன்றாக படித்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. வேறு ஏதாவது தப்பு செய்தால் சொல்லுங்கள் அந்த பெண்ணை நான் கூட்டிட்டு போகிறேன் என்றார்.
ஆண் பிள்ளை
எத்தனையோ இன்னல்களைத் தாண்டி அந்த சட்டக் கல்லூரியில் வானதி படித்தார். நாட்டுக்கு நல்லது செய்யோனும், மக்களுக்கு நல்ல மாதிரியாக பண்ணோனும்னு நாங்கள் அவரை மேற்கொண்டும் படிக்க வைத்தோம். யார் சொல்லியும் கேட்காமல் எங்கள் பெண்ணை ஒரு ஆண் பிள்ளை போல் வளர்த்தோமுங்கோ.
அப்பாவுக்கு பெருமை
வானதியின் தாத்தா வேட்டைக்காரர் என்பதால் அவரது பேத்தியும் அதே போன்ற தைரியத்தை கொண்டிருந்தார். எங்கள் ஊரே மெச்சும் அளவுக்கு அவரை நாங்கள் முன்னுக்கு கொண்டு வந்தோமுங்கோ. 24 மணி நேரமும் யார்கிட்டயும் முகம் கோணாமல் சிரித்த முகத்துடன் சேவை செய்து வருகிறார். அவரால் எனக்கும் அவரது அப்பாவுக்கும் மிகவும் பெருமை.
எங்கள் ஆசை
அவரது அப்பாவும் வானதிக்கு எல்லா கடின காலங்களிலும் ஒத்துழைத்துள்ளார். இதனால் எங்கள் அனைவருக்கும் மக்கள் மீதும் நாடு மீதும் ஆர்வம் உள்ளது. வானதி மேலும் மேலும் அவரது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என தெரிவித்துள்ளார்.