கோவையில் மோடி கிச்சன்... நாளொன்றுக்கு 500 பேருக்கு உணவு... தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்
கோவை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கோவையில் ஏழை எளியோரின் பசியை போக்கும் வகையில் மோடி கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் மனநிம்மதியின்றி அனைவரும் தவித்து வரும் சூழலில் இந்தியா உட்பட பல நாடுகளில் லாக் டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி சமூக தொற்றாக மாறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இங்கு அமலில் உள்ளது. இதனால் சாலையோரம் வசிக்கும் இரவல் பெறுபவர்கள் உணவு கிடைக்காமல் மிகுந்த பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே கோவையிலும் உணவு கிடைக்காமல் பலர் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகிய நிலையில், பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மோடி கிச்சனை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் நாளொன்றுக்கு 500 நபர்கள் வரை உணவு தருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். மேலும், தினக்கூலி வேலை செய்வோர், இரவல் பெறுவோர் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பான மற்றும் தூய்மையான முறையில் உணவு தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள வீட்டில் இருந்தவாறே மோடி கிச்சனை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த வானதி சீனிவாசன், முகத்தில் மாஸ்க் அணிந்தபடியும், கைகளை தூய்மையாக கழுவிய பிறகுமே சமையல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களிடம் கறாராக தெரிவித்துள்ளார். மேலும், உணவு விநியோகம் செய்யப்படும் போதும் சமூக விலகலை கடைபிடித்து கூட்டம் சேராத வண்ணம் அந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும் என தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து வந்து கோவையில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கும் மோடி கிச்சன் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதனிடையே தற்போது முதற்கட்டமாக 500 நபர்களை அடிப்படையாக வைத்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் தேவை அதிகரிப்பின் இன்னும் கூடுதல் நபர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.