கோவை குறித்த விமர்சனங்கள்.. வீண் அவதூறு வேண்டாம்.. திமுகவின் கார்த்திகேய சிவசேனாதிபதி விளக்கம்
கோவை: கோவை மாவட்டத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம். வீண் அவதூறுகள் பேசுவதை அனைவருமே தவிர்த்து உண்மை நிலை அறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தின் 1/ தொகுதிகளிலும் திமுக தோற்றதால் கோவை மக்கள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகினற்ன. இதை கண்டித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காக நம் மாவட்டத்தை உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் ஒரு பகுதியாக சித்தரித்து பல கருத்துக்களை வெளியில் பேசியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருவதைப் பார்க்க முடிகிறது. வெற்றி கிட்டவில்லை என்பதற்காக நம் மக்களையும், நம் மாண்பினையும் நாமே குறை கூறுவது என்பது நாம் கொண்ட கொள்கைகளுக்கு அழகல்ல.
மே.வங்கத்தில் வன்முறை.. கவர்னரிடம், மோடி கவலை.. ''கொரோனாவில் கவனம் செலுத்துங்க''.. திரிணாமுல் பதிலடி
அவதூறு பேச்சுக்கள் வேண்டாம்
கோவை மாவட்ட மக்கள் திமுகவிற்கு அளித்த வாக்குகளின் எண்ணிக்கை 8லட்சத்து 27 ஆயிரத்து 240 வாக்குகள் (38.99%) ஆகும். எதிர்க்கட்சிக்கு அளித்த வாக்குகளின் எண்ணிக்கை 9 லட்சத்து 53 ஆயிரத்து 776 வாக்குகள் (44.95%) ஆகும். கிட்டத்தட்ட 6 சதவீதம் தான் வித்தியாசம். இவ்வாறு குறைந்த அளவே வித்தியாசம் இருக்கும் போது இதுபோன்று அவதூறு பேச்சுக்கள் நமக்கு வாக்களித்த இத்தனை லட்ச மக்களையம் சேர்த்து இகழ்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
கலைஞர் வழி
அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், கட்சியில் இருப்பவர்கள் என அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் நமது தலைவர் அவர்கள் உள்பட அனைவருமே ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளின் மேல் உரிய மதிப்பும், அதனை அனைவரும் பின்பற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்கள் பணியாற்றியவர்கள். அவர்கள் வழியை நாமும் பின்பற்றுவோம்.
தடை, சுணக்கம்
அந்த வகையில், இதை நமக்கான சவாலான பணியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது கொள்கைகள், சித்தாந்தங்கள், நமது சாதனைகள், தேர்தல் அறிக்கைகள் இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில் ஏற்படுள்ள தடை, சுணக்கம் இவற்றை கண்டறிந்த அதை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினைத் துவங்கிட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம்.
— Karthikeya Sivasenapathy (@ksivasenapathy) May 4, 2021
வீண் அவதூறுகள் பேசுவதை அனைவருமே தவிர்த்து உண்மை நிலை அறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.#DMK #TNElections2021 #Kongu pic.twitter.com/Qr4i8iroOS
தொண்டாமுத்தூர்
கடந்த பத்தாண்டுக் கால ஆட்சியில் தமிழகத்தின் நிலை, மாநில உரிமை மக்கள் அடைந்துள்ள இன்னல்கள் பற்றி எடுத்துக்கூறி அதிலிருந்து விடுபட்டு நம் மக்கள் பயன் அடைவதற்கான திட்டங்களை வகுத்து அதனைச் செயல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம். அதுவே நம் முதற்பணி, இது தவிர, மேலும் தொண்டாமுத்தூர் தொகுதிக்கென பல வளர்ச்சிப் பணிகள், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, farm tourism, நீராதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பல திட்டங்களையும் முன்னெடுத்த அனைத்திலும் வேலை செய்து தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்து கோவை மாவட்ட மக்களுக்கு பணியாற்ற இயலவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் கோவை மாவட்ட மக்களுக்கு துணையாக இருந்த அவர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன், மேலும் வரும் காலங்களில் கழகத்தை இங்கே பலப்படுத்தும் பணிகளில் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
பாகுபாடு இல்லை
எனவே கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் எதிர்த்து வாக்களித்தவர்கள் என்ற பாகுபாட்டின்றி அனைத்து மக்களுக்கும் தலைவர் ஸ்டாலின் தான் முதல்வர். தமிழகத்தின் அனைத்து பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒற்றுமை மிகுந்த ஓர் சிறப்பான ஆட்சியாக இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாம் பாடுபடுவோம்
எனவே நம்மால் இயன்ற அளவு கொங்குப்பகுதி மக்களின் தேவைகளை குறிப்பாகக் கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளைத் தலைவர் அவர்களிடம் கொண்டு சென்று அதனை நிறைவேற்றப் பாடுபடுவோம். தலைவரின் கட்டளைக்கு இணங்க இப்பகுதியின் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற நாம் துணை நிற்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம்" இவ்வாறு கூறியுள்ளார்.