உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி
கோவை: உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் ஸ்டாலின் நீதிமன்றம் செல்கிறார் என்றும தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் ஸ்டாலினின் திட்டம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாகச் செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இதற்கு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயங்குகிறது, அஞ்சுகிறது உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின்; தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் ஸ்டாலினின் திட்டம் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார் என்று கூறிய முதல்வர், திமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி, வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு பிரச்னை நாடு முழுவதும் உள்ளதாக பேட்டியின் போது குறிப்பிட்டார்.