பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடியதற்காக மாணவியை சஸ்பெண்ட் செய்தது ஏன்? கோவை கல்லூரி விளக்கம்
Recommended Video
கோவை: கல்லூரி வகுப்பறையில் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் மாலதி என்ற மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், கோவை அரசு கல்லூரி முதல்வர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ வரலாறு முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மாலதி, கடந்த மாதம் 28ஆம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவிகளுடன் பகக்சிங் பிறந்தநாள் கொண்டாடியதாகவும், இதற்காக மாலதியை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், கல்லூரி நிர்வாகம் இன்று மாலை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
செப்டம்பர் 28ம் தேதி, பகத்சிங் விழா நடத்த, காலை 10.30 மணிக்குதான் மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். நண்பகல் 12 மணிக்கு மேல் வரலாற்றுத் துறை தலைவர் அனுமதி பெற்று நடத்த முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், முதல்வர் கூறியதை மதிக்காத மாணவி மாலதி, பகல் 11 மணிக்கே, மாணவிகளை திரட்டி கூட்டம் நடத்தியுள்ளார். வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோதே, அதை புறக்கணித்துவிட்டு, மாணவிகளை கூட்டத்திற்கு மாலதி அழைத்துச் சென்றுள்ளார்.
எனவே, கல்லூரி முதல்வர் ஆணையை மீறி, கூட்டம் நடத்தியது ஏன் என்று மாலதியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் தரும்வரை மாணவி மாலதியின் தற்காலிக நீக்கம் தொடரும். அக்டோபர் 22ம் தேதி நடக்கும் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையில் பங்கேற்க மாணவிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.