மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்! ஷாரிக் ஆதியோகியை டிபியாக வைத்தது ஏன்? ஜக்கி வாசுதேவ் விளக்கம்
கோவை: மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக் ஆதி யோகி புகைப்படத்தை டிபியாக வைக்க காரணம் என்ன என்பது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூசாரி என்பவர் காயமடைந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக் என்ற 24 வயது இளைஞர் படுகாயமடைந்தார்.
இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் முகமது ஷாரிக்தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினார் என்பது தெரியவந்தது.
மங்களூரு குண்டு வெடிப்பு: ஷரிக்கிற்கு ஐ.எஸ் தொடர்பு? கேரளா சென்றது ஏன்? போலீஸ் விசாரணை தீவிரம்
மத அடையாளம்
இவர் தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டதும் போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியதும் தெரியவந்தது. மேலும் மங்களூருவில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஷிமோகாவில் குண்டை வெடிக்கச் செய்து ஒத்திகை பார்த்ததும் தெரியவந்துள்ளது. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடிப்பு சம்பவத்திற்கும் இந்த மங்களூரு குண்டுவெடிப்பிற்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மங்களூரு போலீஸார்
இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர்கள் மைசூர், ஷிமோகா, மதுரை, கோவை, நாகர்கோவில், கோழிக்கோடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை போல் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முகமது ஷாரிக்
மேலும் முகமது ஷாரிக் எனும் இளைஞர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சித்தாந்தத்தால் மூளை சலவை செய்யப்பட்டு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. ஷாரிக் கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
சிம் கார்டு
கோவையில் பிரேம்ராஜ் என்ற பெயரில் ஷாரிக் சிம் கார்டை வாங்கியுள்ளார். அவரது வாட்ஸ் ஆப் டிபியில் ஈஷா ஆதி யோகி சிலையை வைத்திருந்ததாகவும் தெரிகிறது. மேலும் கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள எம்விஎம் தங்கும் விடுதியில் கவுரி அருண்குமார் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமாகவும் திகழும் ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாடஸ் ஆப் டிபி
இந்த நிலையில் ஷாரிக் ஆதி யோகி சிலையை வாட்ஸ் ஆப் டிபியாக ஷாரிக் வைத்திருந்தது குறித்து ஆங்கில நாளிதழுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் பேட்டி அளித்திருந்தார். அவர் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக், ஆதி யோகி சிலையை டிபியாக வைத்துள்ளார். அவர் ஆதி யோகி மீதான பற்றின் காரணமாக வைக்கவில்லை.
ஆதியோகி புகைப்படம்
அவருடைய மத அடையாளத்தை மறைக்கவே ஆதியோகி புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார். மற்றபடி ஈஷா யோகா மையத்திற்கு இதுவரை எண்ணற்ற முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன என ஜக்கி வாசுதேவ் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஷாரிக் கோவையில் சிங்காநல்லூரில் தங்கியிருந்துள்ளது தெரியவந்தது. ஷாரிக் ஒரு ஒயின் ஷாப் முன்பு ஆட்டோவில் ஏறினார். அவர் தலையில் கேப் அணிந்திருந்தார். முதுகில் மிகப் பெரிய பையை மாட்டியிருந்தார். ஆட்டோவை நோக்கி செல்லும் ஷாரிக் அந்த பையை கழற்றி முன்பக்கம் வைக்கிறார். எனவே அந்த பையில் ஷாரிக் குக்கரையும் சக்தி வாய்ந்த வெடிகுண்டையும் எடுத்துச் சென்றிருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரிவதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.