நாகராஜன்தான் இதுக்கு பெஸ்ட்.. முக்கிய பதவியை அள்ளித்தந்த முதல்வர்.. கோவை ஆட்சியர் மாற்றப்பட்டது ஏன்?
கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் திடீரென மாற்றம் செய்யப்பட்டதற்கு பின் முக்கிய காரணங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு பெரிய திட்டங்களை மனதில் வைத்து அவருக்கு புதிய பொறுப்பு ஒன்றை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்ற பின், தொடர்ந்து வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்பதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
முக்கியமாக யானை நடமாட கூடிய, வேகமாக வளர்ந்து வரும் நகரப்பகுதிகளான கோவை போன்ற மாவட்டங்களில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக சோதனைகளையும், ஆய்வுகளையும் செய்து வருகிறது.
கோவை, நீலகிரி மக்களே.. குடை ரெடியா.. இடி, மின்னலுடன் இன்று கன மழைக்கு வாய்ப்பு
ஆய்வு
கடந்த வாரம் கூட கோவையில் வனத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீரென ஆலோசனை மேற்கொண்டார். கோவையில் வனப்பகுதிகள், யானைகள் நடமாடும் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
மாற்றம்
தமிழ்நாடு வனங்களை மீட்பதற்கான திட்டத்தில் தமிழ்நாடு அரசு இறங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் இப்படிபட்ட சூழ்நிலையில்தான் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ஜி.எஸ் .சமீரன் கோவையின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் கடந்த ஒரு மாதமாக சில முக்கியமான பணிகளை செய்தார். தமிழ்நாடு அரசு உத்தரவின் பெயரில், கோவையில் முக்கிய வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை இவர்தான் மீட்டு எடுத்தது.
மீட்பு
கோவையில் வெறும் ஒரே மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பாலான வனப்பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளது. முக்கியமாக யானைகளின் பாதைகள் மீட்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி அருகே பல காடுகள் ஆய்வு செய்யப்பட்டு இப்படி மீட்கப்பட்டு உள்ளன. வனப்பகுதிகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள் , ஹோட்டல்கள் கண்டறியப்பட்டு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் ஆட்சியர் நாகராஜன் இதற்கான பணிகளை செய்து வந்தார்.
எவ்வளவு
ஆட்சியர் நாகராஜன் முயற்சியால் கோவையில் கடந்த ஒரு மாதத்தில் 1050.2 ஹெக்டேர் வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. யானை வழித்தடமான கல்லார் பகுதியிலும் 50 ஹெக்டேர் வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் வனப்பகுதியின் அளவு 12654 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கோவையில் இப்படி முக்கியமான நிலங்களை மீட்க ஆட்சியர் நாகராஜன்தான் காரணமாக இருந்தார்.
சிறப்பு
இந்த நிலையில்தான் நாகராஜன் பணியை பாராட்டும் வகையில், அவருக்கு நில நிர்வாக ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் பதவி மிக உயரிய பதவியாகும். இதன் மூலம் வனப்பகுதி உட்பட அனைத்து நிலங்கள் குறித்தும், அதில் செய்யப்பட்டு இருக்கும் ஆக்கிரமிப்பு குறித்து நில நிர்வாக ஆணையர் ஆக்சன் எடுக்க முடியும்.
பெஸ்ட்
வனப்பகுதிகளை மீட்பதில் இவர் பெஸ்ட் என்று அரசு உணர்வு கொண்டதால் இந்த உயரிய பொறுப்பை நாகராஜனுக்கு வழங்கி உள்ளனர். ஒரே மாதத்தில் மிக வேகமாக செயல்பட்டு காடுகளை இவர் மீட்டு இருக்கிறார். 30 நாட்களில் தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை இவர் முடித்துள்ளார். இதன் காரணமாக இப்போது இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீட்டார்
வனப்பகுதிகளை மீட்டதாலும், 1050 ஹெக்டேர் வனத்தை கோவையில் அதிகரித்த காரணத்தாலும், நிலம் சார்ந்த சிறப்பு துறை இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க வனப்பகுதி ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு என்று அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளிலும் இவர் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முழுக்க பல்வேறு வனப்பகுதிகள் மீட்கும் நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.