ரஜினி சார்.. டிராபிக் ராமசாமி கூட 234 தொகுதியிலும் ஆளை நிறுத்தப் போறார்.. கமான் சார் கமான்!
கோவை: சட்டசபைத் தேர்தலில் எனது நல்லாட்சி இயக்கம் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று டிராபிக் ராமசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
டிராபிக் ராமசாமி கூட 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்து விட்டார்.. நம்ம ரஜினி சார் இன்னும் எதுவும் பேசாமல் இப்படி கமுக்கமாக இருக்கிறாரே என்று "ரைட் சைடில்" ராமசாமியைப் பார்த்து விட்டு அப்படியே "லெப்ட்டில் டர்ன்" செய்து.. ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாஸ்தவம்தானே.. எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்தான் ராமசாமி. பொது நல வழக்குகள் தொடர்ந்து மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் தனி மனிதன். இவரைப் பார்த்து நடுங்காத கட்சிகள் கிடையாது.. அமைப்புகள் கிடையாது.. கிண்டி எடுத்து விடுவார் வழக்குகள் போட்டு. அப்படிப்பட்ட ராமசாமியும் இப்போது அதிரடியாக களம் இறங்கி விட்டார்.
நல்லாட்சி இயக்கம்
நல்லாட்சி இயக்கம்.. இதுதான் டிராபிக் ராமசாமியின் தற்போதைய இயங்கு தளம். இந்த அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி வாக்காளர்களைச் சந்திக்க முடிவு செய்து ஊர் ஊராகப் போய் பிரச்சாரம் செய்து வருகிறார் ராமசாமி. கொரோனா உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல் தில்லாக தைரியமாக, உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருக்கிறார் ராமசாமி.
பின்பற்றுவாரா ரஜினி
ரஜினிகாந்த் சார்.. இந்த இடத்தில்தான் ராமசாமியைப் பார்த்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் தன்னைத் தேடி வர வேண்டும், எழுச்சி வெடித்து வெளிக் கிளம்பி அப்படியே பீறிட்டெழ வேண்டும்.. அப்பத்தான் நான் கிளம்பி வர சவுகரியமாக இருக்கும் என்று ஸ்டார் ஹோட்டலில் பிரஸ் மீட் வைத்து தான் மட்டுமே பேசி விட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் புயலென சீறிச் சென்றவர் ரஜினி.. ஆனால் ராமசாமி எதையும் பேசாமல் நேரடியாக மக்களைப் பார்க்கப் போய் விட்டார்.. !
"ராமசாமி"ன்னாலே துணிச்சல்தானே!
ராமசாமியின் இந்த துணிச்சல் மிக்க பயணம் மக்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த தாத்தாவுக்கு இவ்வளவு உத்வேகமா என்று பலரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். 1 கோடி பேரைப் பார்ப்பது என்ன ஆகிற காரியமா.. ஆனாலும் மனுஷன் அசராமல் புறப்பட்டு விட்டார். இன்று கோவைக்கு வந்திருந்தார் ராமசாமி. சாய்பாபா காலனியில், சாலையில் நின்றபடி "டிராபிக்" பாதிக்காத வகையில், விழிப்புணர்வுப் பிரச்சார பிரசுரங்களை அவர் விநியோகித்தார்.
சூரியன், இலை, தாமரை வேண்டாம்
பின்னர் செய்தியாளர்களையும் மறக்காமல் சந்தித்தார் ராமசாமி. அவர்களிடம் பேசிய அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மறக்காமல் பதில் சொன்னார். டிராபிக் ராமசாமி பேசியதிலிருந்து.... பொதுமக்கள் இனி சூரியன், இரட்டை இலை, தாமரை ஆகியவற்றுக்கு வாக்களிக்க மறுத்து நல்லவர்களுக்கு வாக்களித்தால் மக்களுக்கு நல்லது. ஊழல் செய்பவர்களுக்கு வாக்களிக்காமல், சுயேட்சையாக போட்டியிடும் நல்லவர்களை பார்த்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
234 வேட்பாளர்கள்
நல்லாட்சி இயக்கம் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்கிறோம். ஒரு கோடி மக்களை சந்திக்க உள்ளோம். இன்று முதல் கோவையிலிருந்து பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கம் சார்பில் நல்ல வாக்காளர்கள் நிறுத்தப்படுவார்கள். அதற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
நல்லாட்சி தரும் மக்களாட்சி
வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் இயக்கமாக மக்களாட்சி அமையும். நல்லவர்கள் ஆட்சி செய்யும் நாள் விரைவில் ஏற்படும் என நம்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் கையில்தான் உள்ளது. வீண் செலவுகள் குறைக்கப்படும் என உறுதியளிக்கிறேன். என்னால் கைகாட்டப்படும் வேட்பாளர்கள் மக்களின் வாக்குக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறேன். இனியும் தொடர்ந்து போராடுவேன். வைக்கப்படும் பேனர்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்குத்தான் செல்கிறது. சினிமா நடிகர்களை தவிர கட்சிபாகுபாடின்றி நல்லவர்கள் யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதுவரை சினிமாக்காரர்களை நம்பி மக்கள் ஏமாந்தது போதும். நடிகர்களால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்றும் அதிரடியாக தெரிவித்தார்.