தூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை
கோவையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
கோவை: வீடு முழுக்க ரத்தத் துளிகள்.. தூக்கில் சடலமாக தாய்.. 5 வயது குழந்தையின் மர்ம மரணம்.. இதெல்லாம் கண்டு ஒண்டிப்புதூர் மக்கள் அதிர்ந்து உள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்தவர் வேதவள்ளி. 41 வயதாகிறது. கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்த போது இறந்து விட்டார். இதனால், தன்னுடைய 5 வயது மகள் கார்குழலியுடன் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நடுராத்திரி 2 மணிக்கு வீட்டில் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கொஞ்ச நேரத்தில், கார்குழலிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி, திடீரென கால் டாக்ஸியில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். வேதவள்ளி அவர்களுடன் செல்லவில்லை. இதை அக்கம்பக்கத்தினரும் கவனித்துள்ளனர். டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்துவிட்டு, அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.
இதனிடையே கதவை பூட்டி கொண்ட வேதவள்ளி நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் தட்டியும் திறக்காததால், ஜன்னலை உடைத்து பார்த்தபோது வேதவள்ளி சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். உடனே போலீசுக்கு சொன்னார்கள். அவர்கள் விரைந்து வந்து பூட்டை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்து சடலத்தை மீட்டனர்.
அப்போது வீட்டில் ஆங்காங்கே ரத்தக் கறைகள் தெரிந்திருக்கின்றன.. டிவி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைதவிர, குழந்தையை தூக்கி சென்ற வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலையில் ரத்தக் காயங்கள் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். அது மட்டுமில்லை.. இந்த பகுதிக்கு குடிவந்தே 6 மாசம்தான் ஆகிறதாம்.. வேதவள்ளி யாருடனும் பேசுவதும் இல்லையாம்!
அதனால், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்த போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் தாய் தூக்கில் தொங்கியும், மகள் மர்மமாக இறந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இது குறித்து, வேதவள்ளியின் தந்தை மற்றும் தம்பியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.