மோசம் செய்த சுஜாதா.. கையை துண்டாக வெட்டிய தங்கராஜ்.. கோவை அருகே பரபரப்பு!
கள்ளக்காதலியின் கையை வெட்டிய இளைஞர் சரணடைந்தார்
கோவை: ஆசை காட்டி மோசம் செய்த சுஜாதாவின் கையை துண்டாக வெட்டிவிட்டு போலீசிலும் சரணடைந்துவிட்டார் ஒருவர்!
காரமடை அருகே சின்னதொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுஜாதா. வயசு 30 ஆகிறது. இவருடைய கணவன் பிரபு, 2 வருஷத்துக்கு முன்னாடி ரெயில் விபத்தில் இறந்துவிட்டார்.
அதனால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் சுஜாதா. மேலும் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கிளீனிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அப்போதுதான் காரமடையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சுஜாதாவுக்கு அறிமுகமானார். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இந்த பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்தது. கிட்டத்தட்ட சுஜாதாவின் வீட்டு செலவுகளை எல்லாம் தங்கராஜ்தான் பார்த்து வந்திருக்கிறார்.
இந்த சமயத்தில், சுஜாதாவுக்கு இன்னொருத்தருடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த தங்கராஜ், சுஜாதாவிடம் தகராறு செய்து, இந்த விஷயத்தை பற்றி கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் சுஜாதாவின் கழுத்தை வெட்ட முயன்றார். ஆனால் சுஜாதா இடது கையால் தடுக்கவும், கையின் மணிக்கட்டு பகுதியில் அரிவாளால் ஓங்கி வெட்டி துண்டித்துவிட்டார் தங்கராஜ்.
ரத்தம் கொட்ட கொட்ட வலியால் அலறி துடித்தார் சுஜாதா. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத தங்கராஜ், அரிவாளை எடுத்துக் கொண்டு நேராக போலீசில் போய் சரணடைந்தார்.
சுஜாதாவின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், துண்டித்து கீழே விழுந்துகிடந்த கையை ஒரு பையில் வைத்து எடுத்து கொண்டு, சுஜாதாவையும் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுஜாதாவுக்கு கையை இணைப்பதற்கான சிகிச்சை நடக்கிறது.