மனைவியை பார்க்க போன முருகன்.. துதிக்கையால் தூக்கி வீசி கொன்ற யானை
யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் படுகாயமடைந்தனர்.
Recommended Video
கோவை: மனைவியை பார்க்க காட்டு வழியாக நடந்து சென்ற முருகன் என்பவரை துதிக்கையாலேயே தூக்கி வீசி கொன்றுள்ளது ஒரு யானை!!
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நிறைய காட்டு யானைகள் உள்ளன. இவைகளுக்கு வனத்தில் தேவையான சாப்பாடு, தண்ணீர் இல்லாததால், ஊருக்குள் வந்துவிடுகின்றன.
இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே கண்டிவழி என்ற கிராமம் உள்ளது. இது பழங்குடியினர் வசித்து வரும் கிராமம் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகன். வயது 40. இவரது மனைவி, பணப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருந்தார். அதனால் மனைவியை பார்ப்பதற்காக, நேற்றிரவு முருகன் கிளம்பினார்.
முருகன் பலி
ஆனால் அதற்கு முன்பு நேராக டாஸ்மாக் கடைக்கு சென்று தண்ணி அடித்துவிட்டு, ஃபுல் போதையுடன் கிளம்பினார். காட்டு பகுதியாக முருகன் வரும்போது, திடீரென்று ஒரு யானை குறுக்கே வந்தது. முருகனை தும்பிக்கையால் தாக்கியதுடன், தூக்கியும் விசிறி அடித்தது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
முருகன் சடலம்
நேரமாகியும் இரவு வீட்டுக்கு வந்து சேராததால், முருகனின் உறவினர்கள் தேடி வந்து பார்த்தபோதுதான், பணப்பள்ளி நீர் ஓடை அருகே முருகன் சடலமாக கிடப்பதை பார்த்தனர். இதுகுறித்து போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைடெக் சிட்டி
இதேபோல இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. கோவை பூச்சியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த மலையடிவார பகுதியில் ஹைடெக் சிட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு உணவு தேடி அடிக்கடி யானைகள் வரும் என்பதால், வனத்துறையினர் இந்த பகுதிக்கு யாரும் போகக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
வனத்துறை உத்தரவு
ஆனாலும் சிலர் இந்த உத்தரவை மீறி நடந்து வருகின்றனர். நேற்றும்கூட அந்த சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் சுமார் 20 பேர் இந்த பகுதியில் உட்கார்ந்து ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கே 2 யானைகள் வந்துவிட்டது. இதை பார்த்ததும் போதையில் இருந்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடினார்கள். 20 பேர் கும்பலாக ஓடுவதை கண்டு மிரண்ட யானைகள், அவர்களை விரட்ட தொடங்கி விட்டது.
2 இளைஞர்கள்
அதில் ஒரு யானை செந்தில்குமார், மற்றும் மனோஜ் கார்த்திக் என்ற 2 இளைஞர்களை தனது துதிக்கையால் அலேக்காக தூக்கி வீசியது. இதில் 2 பேருமே படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இளைஞர்களின் அலறலை கேட்ட அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டிவிட்டு, படுகாயமடைந்த 2 இளைஞர்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உயிருக்கு போராட்டம்
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழந்ததும், 2 பேர் உயிருக்கு போராடி வருவதும் கோவை மாவட்ட மக்களை அதிர்ச்சி, கவலையில் ஆழ்த்தி உள்ளது.