தமிழின் மூத்த எழுத்தாளர் ஆய்வறிஞர் கோவை ஞானி காலமானார்!
கோவை: தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞருமான கோவை ஞானி (வயது 85) இன்று காலமானார்.
கோவையில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் ஞானி. இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றவர்.
கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகாலம் பணியாற்றியவர். மார்க்சிய நெறியில் தமிழ் இலக்கியம் குறித்து 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டவர்.
தமிழ் மார்க்சியம் என்பதன் மூல முன்னோடி கோவை ஞானி அவர்கள். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார்.
கோவை ஞானியின் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் விளக்கு விருது (1998), கனடா தமிழிலக்கியத் தோட்ட 'இயல்' விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய 'பரிதிமாற் கலைஞர்' விருது (2013) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்!
பன்முகத் தன்மை வாய்ந்த கோவை ஞானி இறுதி மூச்சுவரை தமிழ் ஆய்வு உலகில் இயங்கி வந்த மிகப் பெரிய ஆளுமை. முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் கோவையில் இன்று முற்பகல் கோவை ஞானி காலமானார். அவரது மறைவுக்கு ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இறுதி மரியாதை செலுத்தினர்.
வாழ்க்கை வரலாறு
இவரது இயற்பெயர் கி.பழனிச்சாமி, புனை பெயர் ஞானி. தமிழ்நாட்டில் கோவை வட்டாரத்தில் சோமனூரில் 1-7-1935 இல் பிறந்தார். பெற்றோர் கிருஷ்ணசாமி, மாரியம்மாள், உடன் பிறந்தவர் எழுவர். கிராமப்புறச் சூழலில் கல்வி கற்றார். கோவையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக கண்பார்வை இழந்த இவர் விருப்ப ஓய்வுப் பெற்றார்.
1988 முதல் உடல்நலம் குறைந்த நிலையிலும் தொடர்ந்து, உதவியாளர் துணையோடு, படித்தும் எழுதியும் இயங்கி வந்தார். தமிழோடுதான் தனக்கு வாழ்வு என்பதில் நிறை வாழ்வு வாழ்ந்தவர். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் 75-வது வயதில், 5-9-2012 அன்று புற்றுநோயால் காலமானார்.
இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். இருவரும் கலை உணர்வில் தேர்ந்தவர். ஒளிப்படக் கலைத் தொழில் செய்பவர். மார்க்சிய நோக்கோடு பழந்தமிழ் இலக்கியத்தையும் தற்கால இலக்கியத்தையும் சிறந்த முறையில் ஆய்வுசெய்து 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம்/மெய்யியல் குறித்தும் நூல்களை வெளியிட்டார்.
தொடக்கம் முதலே தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த இவர், மார்க்சிய இதழாகிய (புதிய தலைமுறையோடும் (1968-70) வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் மார்க்சியத்தின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் முறையில் பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.
சி.சு. செல்லப்பா, க.நா.சு. சிட்டி, லா.சா.ரா. முதலிய மூதறிஞர்களோடும் அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர இராமசாமி, வெங்கட் சாமிநாதன், பிரமிள், பொன்னீலன், ஜெயமோகன் முதலிய தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார். எஸ்.என்.நாகராசன், எஸ்.வி. இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களோடு கூடி மார்க்சியம் கற்றார்.