"ஐயா.. நீங்க இப்படி செய்யலாமா".. மலைக்க வைத்து.. உருக வைத்த "கேன்டீன்" சுப்பிரமணியம்.. 2020-ன் சோகம்
மறக்க முடியாத மாமனிதர் கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்
கோவை: இந்த காலத்தில் இப்படி ஒருத்தரா? என்று வாயை பிளக்க வைத்தவர் கேன்டீன் சுப்பிரமணியம்.. இன்றைய சுயநல உலகில், சுப்பிரமணியம் போன்ற மனிதர்கள் வாழ்ந்தது அபூர்வம்தான்.. இவர் ஒரு நவீன கர்ணன்.. இந்த வருடம் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களில் மிக முக்கியமானவர் கேன்டீன் சுப்பிரமணியன்!
கோவைக்கு வந்து செல்பவர்கள் பலரும் அறிந்த பெயர் கோவை சாந்தி கியர்ஸ்.. ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான இது, உலகளவில் பிரபலமாக நிறுவனமும் கூட.
1996-ல் "சாந்தி சமூக சேவை" என்ற அறக்கட்டளையை தொடங்கி, ஏராளமான சேவைகளை செய்துவந்தவர் சுப்பிரமணியம்... கேன்டீன், ஆஸ்பத்திரி, மெடிக்கல் ஷாப் போன்றவற்றை சிறிதும் லாப நோக்கம் இல்லாமல் நடத்திவந்தார்.
இட்லி
காலையில் இட்லி, சப்பாத்தி, வடை,இப்படி எல்லாத்துக்குமே வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே... தரத்தில் கொஞ்சமும் சமரசம் செய்யாமல் வழங்கி வந்தார். இதற்கு சைடு-டிஷ்ஷாக நான்கு வகை சட்னி ப்ளஸ் சாம்பாரும் கொடுத்து வந்தார்... இது ஒருபுறம் எனில் மதியம் கூட்டு, பொரியல், வடை, அப்பளம், பழம்... என 13 வகைகளுடன் முதல் தரமான சாப்பாடு. அதுவும் அன்லிமிடெட்.. விலையோ வெறும் ரூ.25 தான்.
தொழிற்சாலைகள்
ஃபில்டர் காபியும், ரூ.5 தான்... பண்ணை பசும்பாலில் நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி... என எது தேவையோ அதை நாமே போட்டுக் கொள்ளலாம். தினமும் காலை, மதியம், இரவு என மொத்தமாக 15 ஆயிரம் பேர் சாந்தி கேண்டீனில் சாப்பிட்டு வருகிறார்கள்... கோவையின் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் அதிகம். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்த விலையில் இங்கு வயிறார சாப்பிட்டு வருகிறார்கள்.
குறைந்த விலை
குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக சாப்பாடு தந்து வருகிறார்.. சாப்பாடு உயர்தர ஹோட்டல்களைவிட பன்மடங்கு தரமாக இருந்திருக்கிறது.. ருசியும் அபாரமாக இருக்கவும், ஏராளமானோர் இங்கு சாப்பிட வந்து கொண்டே இருப்பார்களாம். இதனால் அந்த பகுதியில் ஹோட்டல் வைத்திருப்பவர்கள், "ஐயா.. நீங்கள் இப்படி குறைந்த விலையில் சாப்பாடு தருவதால், எங்க ஹோட்டலுக்கு கூட்டமே வருவதில்லை.. நஷ்டம் ஆகிறது" என்று சொல்வார்களாம்.
சாப்பாடு
அதற்கு சுப்பிரமணி, சாப்பாடு விலையை 25 ரூபாயிலிருந்து 20 ரூபாய்க்கு குறைத்துவிட்டாராம்.. இதை பார்த்ததும், மறுபடியும் ஹோட்டல்காரர்கள் திரண்டு வந்து, "என்ன ஐயா, இப்படி செய்துட்டீங்களே" என்று கேட்டால்,இப்படி வந்து பேசினால் இன்னும் விலையை குறைப்பேன் என்பாராம். ஏழைகளுக்கு உணவை தரமாக, அதேசமயம் விலை குறைந்து வழங்குவதில் கடைசிவரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.
ருசி
அதுமட்டுமல்ல, அக்கம்பக்கம் வீடுகளில் இருப்பவர்கள், இந்த ருசியை பார்த்ததும் தங்கள் வீடுகளில் சரியாக சமைப்பதே இல்லையாம்.. டிபன் பாக்ஸ்களை கொண்டு வந்து பார்சல் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.. இந்த விஷயம் கேள்விப்பட்டதும் சுப்பிரமணி, இனி யாருக்கும் பார்சல் கிடையாது என்று சொல்லிவிட்டாராம்.
மறக்க முடியாது
இவர் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார்... ஆனாலும் இவர் செய்த சேவை மக்களை பேச வைத்து வருகிறது. ஆனால், எவ்வளவு சேவை செய்தாலும், தன் முகத்தை மீடியாவிடம் காட்டிக் கொண்டதே இல்லை... வழக்கமாக நம் மக்கள், பசிக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டவர்களை உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள். அந்த வகையில், சுப்பிரமணியனும் உயர்ந்துவிட்டார்!