சரிந்து விழுந்த கொடிக்கம்பம்... அனுராதா கால் மீது ஏறி இறங்கிய லாரி.. கோவையில் ஒரு கொடுமை!
அதிமுகவின் கொடி விழுந்ததில் இளம் பெண் படுகாயம் அடைந்தார்
Recommended Video
கோவை: இன்னும் சுபஸ்ரீயை மறக்கவே முடியவில்லை.. அதற்குள் அனுராதா என்ற இளம்பெண் பேனர் சரிந்து விழுந்த சம்பவத்தில்... கால் உடைந்து ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்.
சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அனுராதா. இவருக்கு இன்னொரு பெயர் ராஜேஸ்வரி. சின்னியம்பாளைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம் போல வேலைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார் அனுராதா. போகிற வழியில் அதாவது கோல்டுவின்ஸ் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக கட்சிக்கொடி கம்பம் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.
சடன் பிரேக்
அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கட்சி கொடி சரிந்து விழுந்துள்ளது. கீழே சரிந்து விழுவதை பார்த்ததுமே அனுராதா சடன் பிரேக் போட்டார். ஆனால், வண்டி சறுக்கிவிட்டது. அப்படியே டூவீலரோடு கீழே விழுந்திருக்கிறார். அந்த சமயம், வேகமாக வந்த லாரி ஒன்று அனுராதாவின் கால் மீது ஏறியுள்ளது. இதையடுத்து ரத்தம் கொட்ட, வலியால் அலறி துடித்த அனுராதாவை அங்கிருந்தோர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆபரேஷன்
கால்களில் நரம்புகள் துண்டித்துவிட்டதாம்... இதற்காக கால்களில் ஆபரேஷனும் நடந்துள்ளது. அதிமுக கட்சி பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் - தாமரை ஆகியோரின் வீட்டு கல்யாணம் போன ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இதற்காகத்தான் அவிநாசி ரோட்டின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கட்சி கொடிகளும் வைக்கப்பட்டு இருந்தன.
முக ஸ்டாலின்
அனுராதா சந்தித்த இந்த விபத்து குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விளம்பர வெறி
ஏற்கனவே இப்படி ஒரு விளம்பர வெறியால்தான் சுபஸ்ரீயை இழந்தோம். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று எல்லா கட்சிக்காரர்களும் போர்க்கொடி உயர்த்தினர். கோர்ட் இந்த விஷயத்தில் தானாகவே முன்வந்து பல கருத்துக்களையும், கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பியது. இனி ஒரு சம்பவம் இப்படி நடக்க கூடாது என்றும் சொன்னது. இன்னமும் சுபஸ்ரீ மரணத்துக்கு நியாயம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அன்று சுபஸ்ரீ, இன்று அனுராதா என்று தொடர்கதைகள் தொடர்கின்றன!