8வது குண்டுவெடிப்பால் உறைந்து போன இலங்கை… சமூக வலைதளங்கள் முடக்கம்!
Recommended Video
கொழும்பு:இலங்கையில் 8வது இடத்தில் குண்டுகள் வெடித்துள்ளதால் அந்நாடே உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.
கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறத மு. க. ஸ்டாலின் அறிக்கை
எங்கும் ரத்த மயம்
அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.
160 பேர் பலி
தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது.
7வது இடத்தில் குண்டுவெடிப்பு
குறிப்பிட்ட இடைவெளியில் 6 இடங்களில் குண்டுகள் வெடித்தன. என்ன நடக்கிறது என்று தெரியாமல் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதனை தொடர்ந்து இலங்கையில் தெஹிவாலா என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் பிற்பகல் சுமார் 2 மணியளவில் 7வது இடத்தில் குண்டு வெடித்தது.
உச்சக்கட்ட பதற்றம்
இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். மதியம் 2.45 மணியளவில் டெமாட்டாகொடா என்ற பகுதியில் 8வது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பலியானவர்கள் விவரம் வெளியாகவில்லை. 8வது இடத்தில் குண்டு வெடித்ததால் இலங்கையில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
முடக்கம்
தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து வதந்திகள் பரவாமல் தடுக்க இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல்
தொடர் குண்டுவெடிப்பை அடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மக்கள் வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.