இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது
கொழும்பு: இலங்கையில் 258 உயிர்களை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தேடப்பட்ட 5 பேர் ஐக்கிய துபாயில் கைது செய்யப்பட்டனர்.
ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பை இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ பிரஸ்கார் விருதுகள் அறிவிப்பு
தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு சி4 ரகத்தை விட அதிக எரிசக்தி கொண்டது. எனவே இந்த வெடிகுண்டுகளை தயாரிக்க நிறைய ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதினர். இந்த விவகாரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு இருப்பதால் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்தது.
இதுதவிர, வெளிநாடுகளில் இருந்தவாறு இந்த தாக்குதல்களுக்கு துணையாக இருந்ததாக சிலரை இலங்கை போலீசார் தேடி வருகின்றனர். குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தடை செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த முஹம்மது மில்ஹான் உள்பட சிலர் தேடப்படும் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முஹம்மது மில்ஹான் உள்பட தேடப்படும் 5 பேரை இலங்கை போலீசார் துபாயில் கைது செய்து, இன்று காலை கொழும்புவுக்கு அழைத்து வந்ததாக இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதினிடம் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் முகமது அசாரூதின் உள்பட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், சிம் கார்டு, லேப்டாப், வங்கி ஆவணஙகள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரிடம் தமிழக காவல்துறை கோவையில் விசாரணை நடத்தி வருகிறது.