நடுக்கடலில் மீனவர்கள் படகு மீது கப்பலை விட்டு மோதிய இலங்கை கடற்படை.. கடலில் விழுந்த தமிழர் கதி என்ன?
கொழும்பு: தமிழக மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதியதில் படகு உடைந்து ஒரு மீனவர் கடலில் மூழ்கினார்.
படகு உடைந்து 3 மீனவர்கள் கடலில் மூழ்கினர். அதில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மீனவர் கடலில் மூழ்கிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டைபட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்று 118 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன.
இதில் TN 08 MM 0201 என்ற பதிவு எண் கொண்ட கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்
1. ராஜ்கிரன், 2. சுகந்தன், 3. சேவியர், அருளானந்தன், ஆகியோர் சென்றுள்ளனர்.
அனைவரும் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 19 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று மாலை 17.30 மணி அளவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை கப்பல் இவர்கள் படகு மீது வந்து மோதியுள்ளது.
இதனால், மேற்கண்ட விசைப்படகு சேதமடைந்து கடலுக்குள் மூழ்கி விட்டதாகவும், விசைப்படகில் சென்ற மூன்று நபர்களில் இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு உள்ளதாகவும் ஒருவரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசைப் படகில் சென்ற சுகந்தன் ராஜ்கிரன் சேவியர் ஆகியோரில் சுகந்தன், சேவியர் இலங்கை கடற்படையால் மீக்கப்பட்ட நிலையில் ராஜ்கிரன் என்பவரை இலங்கை நேவி இதுவரை தேடியும் காணவில்லை என தெரியவருகிறது. இதனால் அவரது குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும் கவலையில் உள்ளனர்.
இதனிடையே, கப்பலை வைத்து மோதியதோடு மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்டை, அவர்களை, இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் அத்துமீறி தொடர்ந்து இந்திய எல்லைக்குள் வருவதாகவும், கைது செய்வதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது- இலங்கை அரசை மத்திய பா.ஜ.க. அரசு கண்டிக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மேலும் மாயமான ராஜ்கிரணை கண்டுபிடிக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 மாதங்களாக இலங்கை கடற்படை அத்துமீறாமல் இருந்தது. ஆனால் கடந்த 15ம் தேதி இலங்கை கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது அத்துமீறி உள்ளே வந்து இந்திய மீனவர்கள் படகுகளை சேதப்படுத்தி கைது நடவடிக்கையையும் எடுத்துள்ளது இலங்கை கடற்படை.