இலங்கையில் அடுத்த குண்டுவெடிப்பு.. ராணுவ சோதனையின் போது பரபரப்பு.. தொடர் பதற்றம்!
கொழும்பு: இலங்கையில் சைந்தாமருது என்று பகுதியில் இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்பிற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்து ஒருவாரம் ஆகியும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இலங்கை தலைநகர் கொழும்பு இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் சைந்தாமருது என்ற பகுதியில் ராணுவம் தீவிர சோதனையில் ஈடுப்பட்டது. அப்போது அங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீடு ஒன்று கண்டுபிடிக்கப்ட்டது. அங்கு வெடிகுண்டுகள் மற்றும் தற்கொலை படை தாக்குதல் உடைகள் தயாரிக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டை அடுத்து பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தப்பிசென்றனர். சில தீவிரவாதிகள் ராணுவத்தை பார்த்ததும் அங்கிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். இந்த குண்டுவெடிப்பில் இரண்டு தீவிரவாதிகள் பலியாகி இருக்கலாம் என்று ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்த வீட்டில் இருந்து வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டில் நடத்திய சோதனையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகள், துப்பாக்கிகள், ரேடார் கருவிகள், டிரோன்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் தற்போது ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகிறது.