ஒரு கையில் குழந்தை.. ஒரு கையில் துப்பாக்கி.. ஆவேசமாக பேசிய மனித குண்டுகள்.. வீடியோ!
தீவிரவாதிகள் பலியாவதற்கு முன்பு பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கொழும்பு: "எங்கள் மனைவிகள் அழிந்தாலும் சொர்க்கத்தில் சந்திப்போம்.. நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்" என்று ஆவேசத்துடன் மனித வெடிகுண்டுகள் மரணத்திற்கு முன்பு சபதம் ஏற்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இலங்கையில், ஈஸ்டா் பண்டிகைக்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவா்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் இருந்தனா்.
அப்போது தேவாலயங்கள், ஸ்டார் ஓட்டல்கள் என 8 பகுதிகளில் தொடா் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில், பலியானவர்களின் எண்ணிக்கை 290ஆக உயா்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கல்முனை
எனினும் மீண்டும் இலங்கையில் தாக்குல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் நேற்று வெளியாகியது. இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினர் நுழைந்தனர்.
15 பேர் பலி
இலங்கை கல்முனைப் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது ஒரு வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் இருந்தனர். அனைவரும் குடும்பத்துடன் தங்கியிருந்தனர். அவர்கள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
மனித வெடிகுண்டுகள்
பாதுகாப்புப் படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் பதுங்கியிருந்தவர்கள் மீது போலீசாரும், போலீசார் மீது பயங்கரவாதிகளும் துப்பாக்கி சூடு நடத்தினர். . தப்ப வழியில்லாததால் அவர்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி வெடித்தனர். இதில் 6 மனித வெடிகுண்டுகள் உள்பட 15 பேர் பலியானார்கள். இதில் 6 பேர் குழந்தைகள் ஆவர், 3 பேர் பெண்கள் ஆவர். ஒரே வீட்டில் 15 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெடிமருந்துகள்
இந்த வீட்டில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளும் சிக்கின. அத்துடன் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தற்போது, மனித வெடிகுண்டுகள் மரணத்திற்கு முன்பு சபதம் ஏற்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
|
விரல்கள் இல்லை
அந்த வீடியோவில் 3 ஆண்கள் உள்ளனர். ஒருவர் வயதானவர். மற்ற இருவரும் இளைஞர்கள். ஒருவருக்கு கையில் விரல்கள் இல்லை, துண்டிக்கப்ட்டது போல தெரிகிறது. ஒருவரின் மடியில் குழந்தை உள்ளது. அவருடைய குழந்தை போல. வீட்டின் மற்ற பகுதிகளில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது. பெண்களும் அங்கு இருப்பது போல தெரிகிறது.
ஆவேச பேச்சு
3 ஆண்களும் மாறி மாறி ஆவேசமாக பேசுகின்றனர். "எங்களோடு இருக்கும் மனைவிகள் அழிந்தாலும் சொர்க்கத்தில் சந்திப்போம். அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு தகுந்த பாடங்கள் புகட்டுவோம். நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்" என்று மாறி மாறி ஆவேசமாக பேசுகிறார்கள். இந்த வீடியோ வெளியானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.