இலங்கையில் கொடூரமான வெடிகுண்டு தாக்குதல்… வேதனை அளிக்கிறது… ஓபிஎஸ், ஈபிஎஸ்
Recommended Video
கொழும்பு: மனிதாபிமானமற்ற முறையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டு வெடிப்பில் 170க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தெஹிவாலாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன. பயங்கரவாதம் எந்த விதத்தில் இருந்தாலும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. பெரும் துயரத்தில் உள்ள இலங்கை மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக, அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், புனித ஈஸ்டர் பெருவிழா நாளில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில், கொடூரமான வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்
பெரும்பாலும் தமிழ் கிறிஸ்துவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.