இலங்கை ஓட்டலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. கொழும்பு விமான நிலையம் அருகே அதிர்ச்சி
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் கட்டு நாயக்க விமான நிலையம் அருகே ஓட்டலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில், இதுவரை 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் மேலும் பல தீவிரவாதிகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அவர்கள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
வெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில் 160 தீவிரவாதிகளுக்கு பயிற்சி... பகீர் தகவல்
வெடித்து சிதறல்
இதையடுத்து பாதுகாப்பு படையினரின் சோதனை இலங்கை முழுவதும் தீவிரமடைந்து இருக்கிறது. இதற்கிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில், மர்மமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த வெடிகுண்டை செயல் இழக்கம் செய்த போது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஓட்டலில் வெடிகுண்டு
அதேநேரம் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையாக கண்காணிப்பட்டு வருகிறது. விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் அருகே ஓட்டல் ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
பாதுகாப்பாக அகற்றம்
இதையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு ஒரு பையில் இருந்த வெடிகுண்டை கைப்பற்றினர். பின்னர் விமான படையினர் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டை வெற்றிகரமாக செயல் இழக்க வைத்தனர்.
மக்கள் பாதிப்பு
இலங்கை முழுவதும் ராணுவத்தினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாகவும் இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.