இலங்கை நாடாளுமன்ற தேர்தல்- இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு- ஆக.5ல் வாக்கு பதிவு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. வரும் 5-ந் தேதி இலங்கையில் வாக்குப் பதிவு நடைபெறும்.
225 எம்.பிக்களைக் கொண்ட இலங்கையின் 8-வது நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 20-ந் தேதி இலங்கை பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்தல் நடைபெறவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 5-ந் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, மைத்ரிபாலவின் சுதந்திர கட்சி ஆகியவை இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பிரதான கட்சிகள்.
ஜேவிபி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மலையகத் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் தென்னிலங்கையில் சிங்களர் வாக்குகளை மகிந்த ராஜபக்சே கட்சி அறுவடை செய்யும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆக.5-ல் இலங்கை நாடாளுமன்ற தேர்தல்.. செம பலத்துடன் வெல்லப் போகும் ராஜபக்சே.. இந்தியாவுக்கு நெருக்கடி?
தமிழர் வாக்குகளை அறுவடைசெய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பெரும் பின்னடைவை எதிர்கொள்ளக் கூடும். ஏனெனில் தமிழர் பகுதியில் தமிழ்க் கட்சிகள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றன. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவு ஓய்கிறது.
இதனையடுத்து ஆகஸ்ட் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.