முஸ்லீம்களின் வாகனம், கடைகள் மீது தாக்குதல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்
Recommended Video
கொழும்பு: இலங்கையில், ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரில், இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் ஒரு வாகனம் கிறிஸ்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஈஸ்டர் தினத்தில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இலங்கை தேசிய தவ்கித் ஜமாஅத் அமைப்பும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கமும் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தது தெரியவந்தது.
இக்குண்டு வெடிப்புக்கு உள்ளான ஒரு நகரம் நெகோம்போ. இங்குள்ள தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். இந்த நகரின் அருகேயுள்ள போருடோடா கிராமத்தில், முஸ்லீம்கள் மீது திடீரென இப்போது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
போருடோடா கிராமத்தில், முஸ்லீம் ஒருவர் ஓட்டிச் சென்ற டக் டக் (ஷேர் ஆட்டோ மாதிரியிலானது) வாகனத்தை, கத்தோலிக்க கிறிஸ்தவ குழு ஒன்று சம்பவத்தன்று வழி மறித்து நிறுத்தியுள்ளது. அந்த வாகனத்தை சோதனையிட வேண்டும் என்று அந்த குழுவினர் முரண்டுபிடித்துள்ளனர். இதற்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் மறுப்பு தெரிவிக்கவே, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்.. கோவை சரளாபோல் வெளுத்த ஜார்க்கண்ட் பெண் வீடியோ
இதையடுத்து, முஸ்லீம் இளைஞர் ஓட்டிச் சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதோடு, முஸ்லீம்களுக்கு சொந்தமான இரு கடைகளும் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதுபற்றி, இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர், ருவான் குணசேகரா கூறுகையில், குடிகாரர்கள் குழுவிற்கு நடுவேயான மோதல்தான், இறுதியில், கலவரமாக மாறியது. கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட அறிக்கையொன்றில், இந்த கலவரத்தில் உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கொழும்பு மண்டல கத்தோலிக்க பேராயர், கார்டினல் மால்கம் ரஞ்சித், "மது போதை மனிதர்களை மிருகத்தைவிட மோசமாக்கிவிடும். மோதல் சம்பவத்திற்கு காரணம், மதுபோதையில் இருந்த கும்பல்தான். குறிப்பிட்ட பகுதியில் மதுக் கடைகளை மூட வேண்டும்" என்றார்.
இலங்கையில் நடந்த, தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, அந்நாட்டில், ஆங்காங்கு முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் இரவு நேரங்களில் முஸ்லீம்கள் வசிக்கும் வீடுகளின் மீது மர்ம நபர்கள் கல்வீசி செல்லும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.