இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது சீன உளவு கப்பல் யுவான் வாங் 5
கொழும்பு: இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5 வந்தடைந்துள்ளது. இந்திய கடலோரத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் "யுவான் வாங் 5" என்ற உளவு கப்பலை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. இந்த கப்பல் மூலமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுவை, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களின் ராணுவ கட்டமைப்புகளை உளவு பார்க்க சீனா திட்டமிட்டுள்ளதாக கருதப்பட்டது.
இதையடுத்து அந்தக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம் என அந்தநாட்டு அரசுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து யுவான் வாங் 5 கப்பலின் வருகையை ரத்து செய்யுமாறு, சீன வெளியுறவுத் துறையிடம் இலங்கை அரசு தெரிவித்தது.
உளவு பார்க்க வரும் சீனக் கப்பலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!
இந்தியாவின் நடவடிக்கை
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை சீனா விமர்சித்தது. இதுகுறித்து சீனா வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை சீனா இடையே உள்ள உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.
சீன உளவுக் கப்பல்
இந்தியா எச்சரித்தும் சீன உளவுக் கப்பல் ஹம்பன்தோட்டாவுக்கு வருகை தர இலங்கை அரசு அனுமதி அளித்தது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அனைத்து கட்சியினருடனும் ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் சீன கப்பலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது.
7 நாட்கள்
இந்த நிலையில் இந்த உளவுக் கப்பல் இன்று இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் வரும் 22 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டிருக்கும். இந்த 7 நாட்களும் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என இலங்கை அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த கப்பல் இந்திய பெருங்கடலில் ஆய்வு பணிகளை நடத்துகிறது இந்த ஆய்வுக் கப்பல்.
சீனா மதிக்குமா
இந்த நிபந்தனைகளை எல்லாம் சீனா மதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்திலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில்தான் ஹம்பன்தோட்டா துறைமுகம் இருக்கிறது. இந்த உளவுக் கப்பல் யுவான் வாங் 5 மூலம் 750 கி.மீ. சுற்றளவில் நடப்பதை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். இது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
டோர்னியர்
இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்திக் கொள்ள இலங்கை அரசு அனுமதி கொடுத்ததாக கூறிய சீனா, அந்த நாட்டு அரசுடன் என்னென்ன பேச்சுவார்த்தைகளை நடத்தியது என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டது. இலங்கைக்கு சீன கப்பல் வரும் முன்பே அந்த நாட்டு கடற்படைக்கு டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை இந்தியா நேற்று ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.