ராணுவ கப்பலுக்கு நோ சொன்ன இலங்கை! டென்ஷனான சீனா.. நேரடியாக டாப் அதிகாரிகள் உடன் சீக்ரெட் மீட்டிங்
கொழும்பு: சீன கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக வேறு சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில காலமாகவே சீனாவின் நடவடிக்கைகள் தென்கிழக்கு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அடுத்தடுத்து சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் உலக நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
முதலில் அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதை எதிர்த்த சீனா, தைவான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்தது மேலும் மிகப் பெரிய அளவில் போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டது.
சீன பதற்றத்திற்கு நடுவே.. காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த அமெரிக்க கடற்படை கப்பல்! ஓ இது தான் காரணமா
சீன கப்பல்
அதேபோல மறுபுறம் சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் என்ற கப்பலும் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகக் கூறப்பட்டது. சீனா இதனை ஆய்வு கப்பல் என்று கூறினாலும், இந்த கப்பலால் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். கொழும்பில் இருந்து கொண்டு இந்தியாவைச் சீனா கண்காணிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியாவும் இலங்கையிடம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது.
இக்கட்டான சூழல்
இலங்கை மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் சிக்கி இருந்த போது, இந்தியா மட்டுமே நிதி கொடுத்து உதவியது. இதனால் அந்த சீன கப்பலின் வருகையைக் காலவரையின்றி தாமதப்படுத்துமாறு இலங்கை கேட்டுக் கொண்டது. இலங்கையின் இந்த கோரிக்கை சீன அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. இலங்கை நாட்டின் முக்கிய அதிகாரிகள் உடன் சீனா முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சீன கப்பல்
இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியே யுவான் வாங் 5 கப்பலின் வருகையை ஒத்தி வைக்க விரும்புவதாகக் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு இலங்கை அரசு கடிதம் எழுதி இருந்ததது.
அதிபர் ஆலோசனை
இந்தக் கடிதத்திற்குப் பின்னர் இலங்கை முக்கிய அதிகாரிகளைச் சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்தித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவே நேரடியாகச் சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்வை சந்தித்ததாகவும் கூட தகவல் வெளியானது. இருப்பினும் இதை இலங்கை அதிபர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எப்போது ஒப்புதல்
முன்னதாக கடந்த ஜூலை 12இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கப்பலை நிறுத்துவதற்கு அப்போதைய இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் சிறிய பராமரிப்புகளுக்காக சீன கப்பல் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா
இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன ராணுவக் கப்பல்களின் நடமாட்டத்தை இந்தியா கூர்ந்து கவனித்தே வருகிறது. கடந்த காலங்களில் கூட இலங்கையில் சீன ராணுவ கப்பல் நிறுத்தி வைக்கப்படும் போது, இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. கடந்த 2014இல் அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலை அதன் துறைமுகம் ஒன்றில் நிறுத்த இலங்கை அனுமதி வழங்கிய போது, இந்தியா- இலங்கை இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
சீனா
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே சீனா மிகப் பெரிய அளவில் உட்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. இதனால் சீனாவிடம் இலங்கை பெரியளவில் கடன்பட்டு உள்ளது. அதேநேரம் மறுபுறம், சுதந்திரத்திற்குப் பின்னர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியா தான் இலங்கைக்கு உதவுகிறது. இதனால் இலங்கை ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைத்து வருகிறது.