இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய காத்திருக்கும் சீனாவின் உளவு கப்பல்.. அனுமதி கிடைக்காமல் தத்தளிப்பு
கொழும்பு: சீனா உளவுக் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்காக அனுமதி கிடைக்கும் தன தவமாய் தவமிருந்து கொண்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி ஆதாயம் அடைவதில் சீனா படு மும்முரமாக இருக்கிறது. சீனாவின் யுவான் வாங் 5 எனும் உளவு கப்பலை இலங்கையில் சீனா கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
அம்பாந்தோட்டா துறைமுகமானது, சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. ஆனால் சீனாவுக்கான கடனை இலங்கையால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அம்பந்தோட்டா துறைமுகத்தை தன்வசமாக்கிக் கொண்டது சீனா.
இந்நிலையில் சீனாவுன் யுவான் வாங் 5 என்கிற உளவு கப்பலை இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு அனுப்ப சீனா முடிவு செய்தது. சீனா இந்த கப்பலை செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பல் என்கிறது. ஆனால் நவீன உளவு கருவிகளுடன் இந்தியாவை கண்காணிக்கவே இக்கப்பல் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இதனால் சீனாவின் உளவு கப்பலை இலங்கை அனுமதிக்கவே கூடாது என இந்தியா தொடக்கம் முதல் எதிர்த்து வருகிறது. இலங்கையோ முதலில் இப்படி ஒரு கப்பலுக்கு அனுமதியே தரவில்லை என்றது. பின்னர் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்றது. இலங்கையின் இந்நிலைப்பாட்டை இந்தியா மிக கடுமையாக எதிர்த்தது.
இலங்கை அம்பந்தோட்டாவில் சீனாவின் உளவு கப்பல் முகாமிட்டால், 700 கி.மீ சுற்றளவில் இந்தியாவின் பெரும்பாலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் எளிதாக கண்காணித்துவிட முடியும். இது இந்தியாவின் ஆபத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல். ஆகையால் இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலை அனுமதிக்கவே கூடாது என்கிறது இந்தியா.
நமது நாட்டின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கைக்குள் நுழைவதை தாமதிக்குமாறு சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்தது அந்நாடு. ஆனால் சீனா இதனைப் பற்றி கவலைப்படவில்லை. இந்தியாவின் நிலைப்பாட்டையும் மிக கடுமையாக விமர்சித்தது. அத்துடன் இலங்கை நோக்கி தமது உளவு கப்பலையும் அனுப்பியது. தற்போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்காக சீனாவின் உளவு கப்பல் காத்திருக்கிறது. இலங்கையோ இதுவரை அனுமதி தரவில்லை. இதனால் இலங்கை-சீனா உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.