இலங்கையில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- தீவிர சிகிச்சைகள்
கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
உலகையே பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை இயக்குநர் அணில் ஜாசிங்க கூறினார்.
இந்நிலையில் கொரோனா தாக்குதல் அச்சத்தால் நாடாளுமன்றத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுடைய பாதுகாப்புக்கு அதிக கரிசனை வழங்கப்பட வேண்டும்; அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாது. ஆகையால் ஏப்ரல் 25-ல் நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இலங்கையில் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்றங்கள் அனைத்தையும் மூடுவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் அனைத்து மதத்தினரும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜ்பக்சே வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.