43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா?
கொழும்பு: இலங்கையில் 43 ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
சமீப காலமாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கருதிய அதிபர் சிறிசேன, கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளார். இலங்கையில் கொடும்குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.
கருணை மனுக்களின் அடிப்படையில் பலரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து முன்னாள் அதிபர்கள் உத்தரவிட்டிருந்தனர். இலங்கையில் ஜூன் 23 முதல் ஜூலை முதல் தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அணுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் கோப்புகளில், தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் தேதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் எந்தவொரு அதிபரும், கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில், 43 வருடங்களுக்கு பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், நிறைவேற்றும் தேதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.