இலங்கையில் உருவானது புரேவி புயல்.. நாளை கரையை கடக்கிறது
கொழும்பு: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் கடந்த வாரம் நிவர் புயல் மையம் கொண்டிருந்தது. இது தமிழகத்திற்கு நல்ல மழை பொழிவை கொடுத்தது. இந்த நிலையில் இந்த புயல் கரையை கடந்த சில நாட்களிலேயே வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புரேவி புயலாக உருவாகியுள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திருகோணமலை அருகே கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும் போது 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. சில நேரங்களில் 95 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும்.
கிளம்பியது புரேவி.. இன்னும் 12 மணி நேரம்தான்.. 4 நாட்கள் செம மழை காத்திருக்கு.. இங்குதான் பெய்யுமாம்
திரிகோணமலை அருகே கரையை கடக்கும் புயல் உடனடியாக மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து அருகில் உள்ள கன்னியாகுமரி பகுதிக்கு 3ஆம் தேதி நகர்கிறது.
பின்னர் மேற்கு - தென்மேற்கு அருகில் நகர்ந்து டிசம்பர் 4-ந்தேதி கன்னியாகுமரிக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.