இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்த உத்தரவு செல்லத்தக்கது இல்லை என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை, கடந்த, அக்டோபர் 26 ஆம் தேதி, அந்த பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, அதற்கு பதிலாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். இந்த நடவடிக்கை உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார் ரணில் விக்கிரமசிங்கே. இதில் ராஜபக்சே தோல்வி அடைந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் சிறிசேனா. இதையடுத்து ஜனவரி 5ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் 13 வழக்குகள் தொடரப்பட்டன. நவம்பர் 13ஆம் தேதி இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், அதிபரின் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டும் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நான்கரை ஆண்டு காலம் பதவி காலத்தை பூர்த்தி செய்யும் முன்பாக அதை கலைப்பதற்கு அதிபருக்கு உரிமை கிடையாது என்ற அரசியல் சாசனத்தின் பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.