புலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் வாக்கு யாருக்கு என்பதுதான் பிரதான விவாதமாக உருவெடுத்திருக்கிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். 1993-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அப்போதைய அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகன்தான் சஜித்.
தந்தை ரணசிங்க பிரேமதாசவின் வழியில்தான் தாம் தொடர்ந்து பயணிப்பேன் என இப்போதும் திட்டவட்டமாக கூறி வருகிறார். சஜித் பிரேமதாசவுடன் களத்தில் மோதுகிறார் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே.
குருப்பெயர்ச்சி வரை காத்திருங்கள்.. அறிவுரை சொன்ன ஜோதிடர்.. ரஜினிகாந்த் போடும் திட்டம்!
போர் குற்றவாளி கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே அழித்து ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே அரசில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர்தான் கோத்தபாய. சர்வதேச போர் விதிகளின்படி வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்ய உத்தரவிட்டதும் இதே கோத்தபாயதான்.
களத்தில் போட்டி..
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் என்ற ஒற்றை காரணத்துக்காக சிறுவன் பாலச்சந்திரனை படுகொலை செய்ய உத்தரவிட்டதும் கோத்தபாய ராஜபக்சேதான். இப்படி புலிகளால் படுகொலை செய்யப்பட்டவரின் மகனும் புலிகளையே அழித்தவரும் இலங்கை அதிபர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக நிற்கின்றனர். இந்த இருவரில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமிழர் அரசியல் தலைவர்கள் தீர்மானிக்கவில்லை. அதேநேரத்தில் எப்போதும் கோத்தபாயவுடன் கை கோர்க்கும் கருணா, டக்ளஸ் உள்ளிட்டோர் இம்முறையும் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
சஜித் மீது விசனம்
தமிழீழ மக்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாசவுடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது. தமிழர் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்தோ புதிய அரசியல் சாசனத்தை எழுதுவது குறித்தோ சஜித் பிரேமதாச உருப்படியான எந்த வாக்குறுதியும் தரவில்லை என்பத தமிழ் தலைவர்களின் விசனம். குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் விரைவாக அரங்கேற்றப்படும் சிங்கள குடியேற்றங்கள், இந்து ஆலயங்களைக் கைப்பற்றி பவுத்த விகாரைகளாக்குவது ஆகியவை தொடர்பில் சஜித் பிரேமதாச மழுப்பலான போக்கை வெளிப்படுத்துவதாகவும் தமிழ் தலைவர்கள் குமுறுகின்றனர்.
அன்று மகிந்த- பொன்சேகா
தமிழர் தரப்பு எந்த முடிவுக்கும் வரமுடியாத அளவுக்கு இரு கடும் போக்காளர்கள் களத்தில் இருக்கின்றனர். 2010-ம் ஆண்டு இதேபோல் தமிழர்களை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவும் இனப்படுகொலை ராணுவத்தின் தளபதியாக இருந்த சரன்பொன்சேகாவும் அதிபர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர்.. அப்போது தமிழர் தாயகப் பிரதேசத்தில் சரத் பொன்சேகா அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். தற்போதும் அதே போன்ற நெருக்கடியான ஒரு நிலையை தமிழர்கள் எதிர்க்கொண்டிருக்கின்றனர்.