இலங்கை குண்டுவெடிப்பு... தடுக்க தவறிய முன்னாள் அதிபர் சிறிசேனவிடம் விசாரணை தேவை... ஆணையம் அறிக்கை
கொழும்பு: இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகளைத் தடுக்க தவறியது தொடர்பாக முன்னாள் அதிபர் சிறிசேனவிடம் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையிலுள்ள தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டினர் உட்பட 279 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பின், இதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இருப்பினும், விசாரணையில் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பது இலங்கையிலுள்ள சஹ்ரான் ஹாஷிம் என்பவரே இந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியதும் தெரியவந்தது.
இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் அசம்பாவித சம்பவங்களை நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக 17 நாட்களுக்கு முன்னரே இந்திய உளவு துறை எச்சரித்ததாகவும் ஆனால், அதை இலங்கை அது குறித்து உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
விசாரணை தேவை
சுமார் 440 சாட்சியங்களிடம் விசாரணை நடத்திய இந்த ஆணையம் தனது அறிக்கையை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் முறையான எச்சரிக்கை வழங்கப்பட்ட பிறகும் கூட, உரிய நடவடிக்கை எடுக்காததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் அதிபர் சிறிசேன மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிசேன பதில்
முன்னதாக, இந்தத் தாக்குதல் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது குறித்து எவ்விதமான எச்சரிக்கைகளையும் தான் பெறவில்லை என்றும் முன்னாள் அதிபர் சிறிசேன தெரிவித்திருந்தார். விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து இப்போது வரை அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
வழக்கு விசாரணை
மேலும், உளவு துறை தலைவர் நிலந்தா ஜெயவர்தன, காவல் துறை ஐஜி புஜித் ஜெயசுந்தர ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தாக்குதலை தடுக்க தவறியது தொடர்பாக ஐஜி புஜித் ஜெயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியாக இருந்த ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு நடைபெற்று வருகிறது.