2018-ல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்...மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக் நிர்வாகம்
கொழும்பு: இலங்கையில் 2018-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
2018-ல் இலங்கையில் முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்களை சிங்களர்கள் கட்டவிழ்த்துவிட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது இன அழிப்பு நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களும் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இலங்கையில் பவுத்தர்களின் உணவுகளில் கருத்தடை மாத்திரைகளை கலப்பது உண்மைதான் என உணவகம் ஒன்றின் உரிமையாளரான இஸ்லாமியர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிற வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இதுதான் 2018 வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்தது.
இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிதல் உள்ளிட்டவற்றில் ஃபேஸ்புக் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தோனேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை ஃபேஸ்புக் நிர்வாகம் வெளியிட்டது.
அதில் இலங்கை விவகாரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் தங்களது தவறுகளால் ஏற்பட்டிருக்கும் மனித உரிமை பிரச்சனைகளுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனிவரும் காலங்களில் தவறான உள்ளடக்கங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது