பிரதமர் மாறிட்டார்.. எங்க நிலைமை மாறல..! மண்ணெண்ணெய்க்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் இலங்கை மக்கள்!
கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பிரதமர் மாறினாலும் மக்கள் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசலுக்கு மக்கள் நாள் முழுவதும் காத்திருந்தாலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
ஊட்டச்சத்து மாவில் முறைகேடு? புகார் கிளப்பிய பாஜக அண்ணாமலை! அரசு வெளியிட்ட விரிவான விளக்கம் இதோ..!
இந்த போராட்டமானது வன்முறையாக வெடித்ததையடுத்து பல இடங்களில் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவி இருந்து விலகினார்.

இலங்கை நெருக்கடி
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைக்கப்படும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார். அதன்படி அதிபர் மாளிகையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் அவர் மீதும் நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருட்களின் விலை உயர்வு
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பிரதமர் மாறினாலும் மக்கள் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை. உணவுப் பொருள்கள் விலை உயர்ந்துள்ளதுடன் எரிபொருள் தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசலுக்கு மக்கள் நாள் முழுவதும் காத்திருந்தாலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு
மண்ணெண்ணெய்க்காக மக்கள் நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனிடையே முன்னுரிமை பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட எரிபொருள் விற்பனை நிலைங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.

டீசல் கப்பல்
தற்போது சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் மட்டுமே கையிருப்பில் இருப்பதாகவும் இந்தியா உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் வரும் 16- தேதி நாட்டை வந்தடையும் வரையில் இந்த நிலை தொடரும் என்றும் கூறியுள்ளது. இதனால் எரிபொருள் இன்றி பேருந்துகள் மற்றும் லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட, இலங்கையில் தற்போது போக்குவரத்தும் முடங்கியுள்ளது.