சூட்கேசை திறந்து பார்த்தால்... அலறி அடித்து ஓடிய பெண்.. இலங்கைக்கு வந்த இங்கிலாந்து பல்லி
சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் பல்லி இருப்பது கண்டறியப்பட்டது.
கொழும்பு: தன்னுடைய சூட்கேஸை திறந்து பார்த்தவுடன் அலறி அடித்து ஓடிவிட்டார் அந்த இளம் பெண்!
இங்கிலாந்தின் செஸ்டர் நகரை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு 3 நாள் பயணம் வந்தார். ஊரெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு, 4 நாட்களுக்கு முன்பு சொந்த நாடு திரும்பினார். வீட்டுக்கு போனதும் முதல் வேலையாக சூட்கேஸை திறந்து பார்த்தார் அந்த பெண். அப்போது, ஒரு பெரிய பல்லி ஒன்று இருப்பதை பார்த்து அலறி அடித்து ஓடினார்.
கொஞ்ச நேரம் கழித்து அருகே வந்து பார்த்தாலும் அந்த பல்லி சூட்கேசிலேயே இருந்தது. இலங்கையில் இருந்தபோது இந்த பல்லி எப்படி வந்து சூட்கேசுக்குள் ஏறிக் கொண்டது என தெரியவில்லை. பல்லியை பார்த்து பயந்தாலும், ரொம்பவும் சிரமப்பட்டு அதை சூட்கேசில் இருந்து வெளியே எடுத்து ஒரு சிறிய பெட்டியில் போட்டு மூடினார் அந்த பெண். பிறகு உடனடியாக விலங்கு நலவாரிய தொண்டு நிறுவனத்திடம் பேசி விஷயத்தை சொன்னார்.
இலங்கை பல்லி இங்கிலாந்துக்கு வந்துவிட்டதை அறிந்த அதிகாரிகளும் விரைந்து வந்து அந்த பல்லியை கைப்பற்றினார்கள். கிட்டத்தட்ட 5500 மைல் தூரம் டிராவல் செய்து வந்துவிட்ட பல்லி பற்றி அவர்கள் சொன்னதாவது:
"வெளிநாட்டிலிருந்து இப்படி எப்பவாவது தவறுதலாக எடுத்து வரப்படும் மிருகங்களை திரும்பவும் சொந்த நாட்டின் இயற்கை சூழலிலேயே விட முடியாமல் போய்விடுகிறது. இலங்கை வானிலை வேறு, இங்கிலாந்தில் எப்பவும் ஜில்லுதான்.
எப்படியும் இந்த குளிர்ச்சியை இந்த பல்லியால் தாங்கி கொள்ள முடியாது. இப்படியே இங்கு விட்டாலும் இங்கிலாந்தில் அது சட்டப்படி குற்றம். அதனால் விலங்கு நல ஊழியரிடம் கொடுத்து இந்த பல்லியை நன்றாக பராமரிக்க எடுத்து செல்லப்படும்" என்றார்.