இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கோத்தபாய ராஜபக்சேவுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தவர் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே. 2019-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தை மூர்க்கமாக முன்னெடுத்தவர் கோத்தபாய.
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தவர். பிரபாகரன் மகன் 11 வயது சிறுவன் பாலச்சந்திரனை சுட்டுக் கொல்லவும் உத்தரவு பிறப்பித்தவர் கோத்தபாய. இதனால் கோத்தபாய ராஜபக்சே மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் வழக்கு
அமெரிக்கா குடியுரிமையையும் பெற்றுள்ளதால் கோத்தபாய ராஜபக்சே மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் தமது அமெரிக்கா குடியுரிமையை கைவிடுவதாக ஏப்ரல் மாதம் கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதரகத்தில் விண்ணப்பம் கொடுத்திருந்தார் கோத்தபாய.
குவியும் வழக்குகள்
இந்த கோரிக்கை நிலுவையில் இருக்கும்போதே மேலும் பல போர்க்குற்ற வழக்குகள் அமெரிக்கா நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக்சே மீது தொடரப்பட்டன. இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.
அமெரிக்கா பட்டியல்
தற்போது தங்கள் நாட்டு குடியுரிமையை கைவிட்டவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கோத்தபாய ராஜபக்சேவின் பெயர் இடம்பெறவில்லை.
கோத்தபாய போட்டியிடுவதில் சிக்கல்
அடுத்ததாக இன்னொரு பட்டியலையும் அமெரிக்கா வெளியிட உள்ளதாம். அப்பட்டியலிலும் கோத்தபாய ராஜபக்சே பெயர் இடம்பெறாமல் போனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் பெரும் சிக்கல் எழும் என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.