இலங்கை: இந்திய வம்சாவளி மலையக தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம்
கொழும்பு: இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் (ஆறுமுகம் தொண்டமான்) உடல் மே 31-ல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று இலங்கைக்கான இந்திய தூதரை சந்தித்து பேசினார். அப்போது மலையகத் தமிழர்களுக்கு (இந்திய வம்சாவளி) இந்தியா வீடு கட்டித் தரும் திட்டம் குறித்து விவாதித்தனர்.
இதன்பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலும் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்றார். இந்திய தூதருடனான சந்திப்பை தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தார். அவரது மறைவு இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மலையகத் தமிழர்களின் முகமாக திகழ்ந்தவர் ஆறுமுகன் தொண்டமான். அவரது உடல் வரும் 31-ந் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக ஆறுமுகம் தொண்டமானின் மைத்துனர் செந்தில் தொண்டமான் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக மலையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0
கொழும்பு பத்தரமுல்லையில் ஆறுமுகன் தொண்டமான் உடல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இலங்கை அமைச்சர்கள், எம்பிக்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். நாளை இலங்கை நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆறுமுகன் தொண்டமான் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் கொத்மலை வேவன்டனில் உள்ள தொண்டமான் பங்களாவிலும் பின் கொட்டகலை வளாகத்துக்கும் ஆறுமுகம் தொண்டமான் உடல் எடுத்துச் செல்லப்படும். மே 31-ந் தேதி நோர்வூட் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் தொண்டமான் உடல் தகனம் செய்யப்படும்.