அங்கொடா லொக்கா ...தொழில் கூட்டாளி...இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!!
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா தமிழகத்தில் இறந்தது தொடர்பான அறிக்கைகளை இந்திய உயர் கமிஷன் அதிகாரிகளிடம் இலங்கை போலீஸ் கேட்டு இருந்த நிலையில் அவரது தொழில் கூட்டாளி இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மதுரையில் எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்காவின் கூட்டாளியான சோல்ட்டா என்ற அசித ஹேமதிலகேவை என்கவுன்டரில் இலங்கை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது. 2017-ல் அழகு நிலையத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஹேமதிலகே. இந்த நிலையில் முல்லேரியவா பகுதியில் இருக்கும் வெலிவிட்டா இவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்கு மண்டல தேஷபந்து தென்னகூன் டிஐஜி கூறுகையில், '' அங்கொடா லொக்காவின் தொழில் கூட்டாளியாக இலங்கையில் செயல்பட்டு வந்தவர் சோல்டா. இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். 2017ல் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணை கொலை செய்தார். அதே அழகு நிலையத்தில் அதே ஆண்டில் தாதா ஒருவரும் கொலை செய்யப்பட்டார்'' என்றார்.
காதலி கைது
மதுரையில் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா எரிக்கப்பட்டது தொடர்பாக அவருடைய காதலி அம்மானி தான்ஞி, மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தியானேஸ்வரன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் மதுரையில் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.
ஆவணங்கள்
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கோவை டி.எஸ்.பி. பரமசாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு மதுரையில் விசாரணை மேற்கொண்டது. சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இவர்கள் திங்கள் கிழமை தங்களது சோதனையை முடித்துக் கொண்டனர்.
விசாரணையில் தாமதம்
கோவையில் இருந்து சென்ற குழுவுக்கு உதவுவதற்கு மதுரையில் இருந்து பணியாற்றிய சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரையில் சோதனையில் பங்கேற்ற அத்தனை அதிகாரிகளும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக தற்போது இந்த விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அங்கொடா லொக்கா
இலங்கையிலும் அங்கொடா லொக்கா குறித்து விசாரணை தீவிரமடைந்து வருகிறது. அங்கும் பல்வேறு கொலை, கொள்ளை, கடத்தல் ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரது கூட்டாளிகளில் ஒருவரான சோல்டா என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார். மேலும் அவரது கூட்டாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.