ஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை
Recommended Video
கொழும்பு: ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியது ஏன்? என்று இலங்கையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்திய அதிகாரிகள் முகாமிட்டனர். அமெரிக்கா அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை.
ஆனால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் இருவரை சந்தித்து பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
தற்போது இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நீட்டிப்பது தொடர்பான விவாதம் நேற்றும் நடைபெற்றது.
இதில் பேசிய கூட்டு எதிரணி எம்.பி. விமல் வீரவன்ச இந்த பிரச்சனையை எழுப்பினார். அவர் பேசுகையில், வெலிசறை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை அமெரிக்கா அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கமாட்டோம் என கூறியிருந்தனர்.
ஆனாலும் இரு அதிகாரிகள் அந்த சந்தேக நபர்களை சந்தித்து பேசியது எப்படி? ஜூலை 21-ந் தேதி காலை 9 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது கொழும்பு அமெரிக்கா தூதரகத்தில் பணியாற்றும் சஞ்சய் பலிப்பானவும் உடன் இருந்துள்ளார். அப்படி என்ன சந்தேக நபர்களுடன் 2 மணிநேரம் அமெரிக்கா அதிகாரிகள் விவாதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.