புலிகள் இல்லை.. இன்னொரு பக்கம் அமைச்சர்கள் நெருக்கடி.. இப்படித்தான் வளர்ந்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.!
Recommended Video
கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதும் அமைச்சர்கள் பலரது நெருக்கடியும்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வேர்பிடித்து நாசகார தாக்குதலை நடத்தக் காரணம் என்கின்றனர் இலங்கை பத்திரிகையாளர்கள்.
இலங்கையின் கிழக்கு மாகாணமான அம்பாறையில் பல இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததும் அவர்களில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதும் அங்கு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஊடகங்களில் இடப்பெயர்வு என்கிற சொற்றொடர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அம்பாறையின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இன்னமும் அப்பகுதிகளில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, வடக்கில் எப்படி ராணுவம் நிற்கிறதோ அதேபோல்தான் கிழக்கிலும் ராணுவம் இருக்கிறது. ஆனால் வடக்கில் காட்டப்படும் கெடுபிடிகள் கிழக்கில் இல்லை.
இதனால்தான் வடக்கில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழர்கள் முன்வைத்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இனி தலையெடுக்காது என்பதால் கிழக்குப் பகுதியில் கண்துடைப்புக்குத்தான் ராணுவம் நிறுத்தப்பட்டிருந்தது.
அதே காலகட்டத்தில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் தலையெடுக்கவும் தொடங்கினர். தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பில் ஹாசீமின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் அவரை வெளியேற்றி இருக்கின்றனர். ஹாசீம் அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவர்.
இப்போதும் அந்த இயக்கம் மிதவாத முஸ்லிம்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. ஆனால் ஹாசீம் திடீரென தலைமறைவாகி சமூக வலைதளங்களில் தம்மை கடும்போக்கு தீவிரவாதியாக வெளிப்படுத்தி வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார்.
இதை அப்போதே இலங்கை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்தியாவில் ஹாசீமின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டபோது கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளிலும் இலங்கை அலட்சியம் காட்டியது.
ஹாசீமைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் இந்தியா, இலங்கை நாடுகளில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினார். இதன் பாரதூர விளைவுகளை பலநாட்டு உளவு அமைப்புகள் சுட்டிக்காட்டிய போதும் இலங்கை அக்கறை கொள்ளவில்லை.
இதற்கு காரணம் இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்கள் என்றுதான் கைக்காட்டப்படுகிறது. அதேபோல் முன்னாள் ஆளுநர்களும் கூட இந்த கடும்போக்காளர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இவ்வளவு ஏன்? இலங்கையில் கால்பதித்துள்ள இந்துத்துவா அமைப்பான சிவசேனைக்கும் கூட இத்தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களும் கூட இதுபற்றிய அக்கறையை காட்டாமல் இருந்துள்ளனர் என்பதும் குற்றச்சாட்டு. இவர்கள் அல்லாமல் இஸ்லாமிய மக்களும் இந்த கடும்போக்காளர்கள் குறித்து கனத்த மவுனத்தை காட்டி வந்தனர்.
இதனால் இந்த தீவிரவாதிகள் கை ஓங்கி ஒருதேசத்தையே நிர்மூலமாக்கி நிற்கிறது. இன்று ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனர். வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மக்கள் நல்லிணக்கத்தையும் அமைதியையும் முன்னெடுக்க வேண்டும் என்பது இப்போதைய இலங்கையின் தேவை.!