இந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்!
இலங்கையில் இந்தியா முதலீடு செய்யவில்லை என்றால் சீனா முதலீடு செய்யும், நாங்கள் சீனாவின் உதவியை நாட தயாராக இருக்கிறோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் இந்தியா முதலீடு செய்யவில்லை என்றால் சீனா முதலீடு செய்யும், நாங்கள் சீனாவின் உதவியை நாட தயாராக இருக்கிறோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே சீனாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரின் அண்ணன் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போதுதான் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகம் ஆனது. இது இந்தியாவை பெரிய அளவில் பாதித்தது.
தற்போது தம்பியும் அதேபோல் சீனாவின் உதவியை நாட இருக்கிறார். இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்திய பயணத்தில் இந்த பேட்டியை கோத்தபய ராஜபக்சே அளித்துள்ளார்.
என்ன பேட்டி
அவர் தனது பேட்டியில், இந்தியா ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற ஆசிய நாடுகள் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் . அவர்கள் எப்போது எங்கள் நாட்டில் முதலீடு செய்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
நாடு முன்னேற வேண்டும்
எங்கள் நாட்டை முன்னேற்ற அவர்கள் உதவ வேண்டும். முதலீடுகள் மூலமே எங்கள் பொருளாதார நெருக்கடியை நாங்கள் சமாளிக்க முடியும். எங்களுக்கு மட்டும் இல்லை ஆசியாவில் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.
சீன அரசு
சீன அரசு பல நாடுகளில் முதலீடு செய்து வருகிறது. இந்தியா எங்கள் மீது முதலீடு செய்யவில்லை என்றால் சீனா முதலீடு செய்யும். சீனாவின் உதவிகளை எப்போதும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சீனாவின் உதவிகள்
நாங்கள் பல திட்டங்களை கொண்டு வர போகிறோம் எங்களுக்கும், சீனாவிற்கும் இருக்கும் உறவு குறித்து பலர் சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமே சீனாவுடன் உறவு வைத்துள்ளோம், என்று கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
பெரிய அதிர்ச்சி
இதனால் சீனாவுடன் மீண்டும் இலங்கை நெருக்கமாக போகிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக சீனாவை வைத்து கோத்தபய ராஜபக்சே கேம் ஆடுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.