கொதிக்கும் ஈழ மக்கள்.. முத்தையா முரளிதரன் படத்தில் இதை எடுத்தால் பெரும் பிரச்சனையாக மாறும்!
கொழும்பு: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஈழத் தமிழர்களை தொடர்புபடுத்தி படக்கதைகள் இருந்தால் அது ஈழத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் என்று இலங்கை தமிழ் மக்கள் எச்சரிக்கிறார்கள்.
இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படும் "800" என்ற திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. இதில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புகளே அதிகமாக உள்ளன. விஜய் சேதுபதி கடுமையாக விமர்சித்து நேற்றிலிருந்து ட்விடட்ரில் ஹேஷ்டாக் போட்டு பலர் பதிவிட்டு வருகிறார்கள். இன்றைக்கு கூட இயக்குனர் பாரதிராஜா, முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முத்தையா முரளிதரன் படத்திலா? நல்லா பாருங்க.பிரபாகரனை போல இருக்கீங்க... விஜய்சேதுபதிக்கு தாமரை கடிதம்
சிறந்த சுழற்பந்து வீச்சாளர்
இலங்கை கிரிக்கெட் அணி வீரராக விளையாடிய முத்தையா முரளிதரன், உலக அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கினார். எனினும் முத்தையா முரளிதரன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியில் தான் பேசுவார் என்பதுடன், போரின் போது ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால் தமிழர்கள் மத்தியில் அவர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
என்ன செய்தார் அவர்
இலங்கை அரசியலோடு முத்தையா முரளிதரனின் தொடர் பயணங்கள் அவருக்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், தன்னை தமிழனாக அடையாளப்படுத்தி கொள்ள தவறியதும் இந்த அளவுக்கு எதிர்ப்புக்கு காரணம் என்கிறார்கள் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.
பெரும் பிரச்சனையும் வரும்
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில், அவரது சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கை தொடர்பிலான விஷயங்களை படமாக்கினால், அதை வரவேற்பதாக இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஜெயரட்ணம் துவாரகன் பிபிசியிடம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேநேரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் ஈழத் தமிழர்களை தொடர்புபடுத்தி, தேவையற்ற விஷயங்களை எடுத்தால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவிக்கும் என்றார்.
கொச்சைப்படுத்தியதாக புகார்
ஈழப் போராட்டத்தின்போது முத்தையா முரளிதரன், ஈழப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தாக ஈழத்தமிழரகள்பலர் புகார் தெரிவிக்கின்றனர் அவர்களின் கூற்றுப்படி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மாத்திரம் மையப்படுத்தி இந்த திரைபடம் எடுக்கப்படுவதாக இருந்தால், அதில் எந்தவித பிரச்சனைகளும் கிடையாது என்கிறார்கள். ஆனால் ஈழத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்படுவதாக இருந்தால் அது பிரச்சனைக்குரிய விஷயமாகும் என்றார்கள்.
அரசியல் கிடையாது
இதனிடையே விஜய் சேதுபதியோ, முத்தையா முரளிதரனோ இந்த சர்ச்சைகளுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளித்தது இல்லை. அதேநேரம் "800" திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தார் (Dar) மோஷன் பிக்சர்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "முத்தையா முரளிதனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பல்வேறு வகையில் அரசியலாக்கப்பட்டு வருவதை அறிகிறோம். "800" திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழக்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம்" என்று கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு எப்போது துவங்கும்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "800" படம், இலங்கை, இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கி, 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.