அஜித் தோவல் இலங்கை சென்ற இரு மாதங்களில்.. நாளை கொழும்பு செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கொழும்பு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமையான நாளை, இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இருநாட்டு உறவுகள் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை பற்றி இலங்கை அரசு பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். அப்போது அடுத்த நாளே இலங்கைக்கு ஜெய்சங்கர் விஜயம் செய்தார். மைத்ரிபால சிறிசேனா அதிபராக இருந்தபோது இந்தியா அவருடன் நெருங்கிய உறவை பேணியது. புதிய அரசுடனான உறவையும் பேண வேண்டும் என்பதற்காகத்தான் ஜெய்சங்கர் உடனடியாக இலங்கை விஜயம் செய்ததாக கூறப்பட்டது.
தற்போது மீண்டும் ஜெய்சங்கர் இலங்கை பயணம் செய்ய உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் உடன், ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த 10 வருடங்களாக, இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த துவங்கியது முதல், இந்தியா-இலங்கை இடையேயான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. இதை சரிப்படுத்தி இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் ஜெய்சங்கரின் இந்த விஜயம் இருக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் காருக்கு பின், வேகமாக அணிவகுத்த கார்கள்.. குறுக்கே வந்த மாடு.. தூத்துக்குடி அருகே விபத்து
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு சென்று கடல்சார் கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை மற்றும் மாலே ஆகிய நாடுகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இந்த விஜயம் நடைபெற்ற இரண்டு மாதங்களில் மற்றொரு முக்கியமான இந்திய பிரதிநிதி இலங்கை செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த 36 மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்று மீன் பிடித்ததாக கூறி அந்த நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விவகாரம் தொடர்பாக இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்படும். மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெய்சங்கர் முயற்சிகளை முன்னெடுப்பார் என்று கூறப்படுகிறது.