அத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்
செய்தி சேகரிக்க சென்ற இந்திய பத்திரிகையாளர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு: டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை இலங்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் சித்திக்கி அகமது டேனிஷ். இவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்காக பணியாற்றி வரும் புகைப்பட - செய்தியாளர். டெல்லியைச் சேர்ந்தவர்.
இலங்கை நிலவரம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக கொழும்பில் முகாமிட்டிருந்தார். இவரைத்தான் தற்போது இலங்கை போலீஸார் கைது செய்தனர். அவரை மே 15ம் தேதி வரை சிறையில் அடைக்க நெகம்போ மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து சித்திக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
நெகம்போ நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்திற்குள் செய்தி சேகரிப்பதற்காக செல்ல முயன்றார் சித்திக்கி. இதையடுத்து அவரை போலீஸார் அத்துமீறி நுழைந்ததாக கூறி கைது செய்து விட்டனர்.
செயின்ட் செபாஸ்டியன் சர்ச் குண்டுவெடிப்பில் இந்த பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் உயிரிழந்துள்ளான். அந்த மாணவன் தொடர்பான விவரம் சேகரிக்க பள்ளிக்குள் நுழைந்துள்ளார் சித்திக்கி. இதையடுத்தே அனுமதி பெறாமல் பள்ளிக்குள் நுழைந்ததாக அவரை போலீஸார் கைது செய்தனர்.