ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தெரியாமலே நடத்தப்பட்டதா இலங்கை ஈஸ்டர் தாக்குதல்?
கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தெரியாமலே நடத்தப்பட்டது என்றும் பயங்கரவாதி சஹ்ரானின் கூட்டாளிதான் அந்த இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பொறுப்பேற்க வலியுறுத்தியதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை தாக்குதல்கள் தொடர்பாக சவூதியில் இருந்து 5 சந்தேக நபர்கள் கடந்த வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்களில் முகமது மில்ஹானும் ஒருவர்.
இவர்தான் சஹ்ரானின் நெருங்கிய கூட்டாளி. தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இலங்கையைவிட்டு வெளியேறி சவூதி அரேபியா சென்றார்.
இவரிடம் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புலனாய்வு அதிகாரிகள், சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தன்னிச்சையாகவே தாக்குதல்களை நடத்த முடிவு செய்திருக்கிறது.
தாக்குதல்களை நடத்திய பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை பொறுப்பேற்க வைக்கும் பணி மில்ஹானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சஹ்ரானுக்குப் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக பொறுப்பேற்க இருந்தவர்தான் மில்ஹான்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் சவூதி அரேபியாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தலைவர்களுடன் தொடர்பு கொண்டு மில்ஹான் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த இயக்கத்திடம் மில்ஹான் கெஞ்சியிருக்கிறார்.
இதையடுத்து 2 நாட்களுக்குப் பின்னர் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அறிவித்தது. இத்தகவல்களை விசாரணையின் போது மில்ஹான் தெரிவித்தார் என்றனர்.