இலங்கை குண்டுவெடிப்பு.. முன்கூட்டியே எச்சரிக்கை.. இந்தியாவுக்கு தகவல் கிடைத்தது எப்படி?
கொழும்பு: ஐஎஸ் தீவிரவாதி என சந்தேகத்தின் பேரில் பிடிப்பட்டவரிடம் இருந்து இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டிருந்தது குறித்து முன் கூட்டியே தகவலை இந்தியா பெற்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 359 பேர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து இந்தியா முன்கூட்டியே இருமுறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவில் அண்மையில் ஐஎஸ் தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்தான் இலங்கை குண்டுவெடிப்பு குறித்த திட்டத்தை தெரிவித்தார் என அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதல்.. 2 முறை எச்சரிக்கை விடுத்தது இந்தியா.. அலட்சியம் காட்டியது இலங்கை
தகவல்
இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதியிடம் விசாரணை நடத்தியதில் தற்கொலை படை தாக்குதல் நடத்த யாருக்கு அவர் பயிற்சி கொடுத்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பயிற்சி கொடுத்த நபர் பெயர் ஜஹ்ரான் ஹாசிம் என்ற தகவலையும் கொடுத்துள்ளார். அவர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடு
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அந்த அமைப்பு வெளியிட்ட வீடியோவில் ஜஹ்ரான் காணப்படுகிறார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறுகையில் இந்த வீடியோவில் இருப்போர் இஸ்லாமிய நாட்டின் போராளிகள் என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசு
எனினும் அந்த நபரை கைது செய்தது எப்போது என்பது குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும் ஜஹ்ரானின் பெயர் மற்றும் விவரங்களை இலங்கை அரசிடம் இந்தியா கடந்த 4-ஆம் தேதி தெரிவித்துள்ளது.
ரகசிய தகவல்
இந்த விவரங்கள் அடங்கிய ஏப்ரல் 11-ஆம் தேதியிட்ட அறிக்கையில் ஜஹ்ரானின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதில் " தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமும் அவரது இயக்கத்தினரும் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப் போவதாக ஒரு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் (இந்தியா) ரகசிய தகவல் அளித்துள்ளது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகத்தை மூடி
ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட வீடியோவில் இலங்கை தற்கொலை படை தீவிரவாதிகள் என கூறப்படும் 8 பேர் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக கைகளால் சத்தியம் செய்வது போல் உறுதி ஏற்கின்றனர். ஆனால் ஜஹ்ரானை தவிர்த்து அனைவரும் முகத்தை மூடியுள்ளனர்.
150 பேர்
ஜஹ்ரான்தான் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என கூறப்படுகிறது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை இரு ஆண்டுகளாக இலங்கை போலீஸாருக்கு தெரியும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இலங்கையில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியவர்கள். நாட்டில் 100 முதல் 150 பேர் வரை உள்ளனர் என கூறப்படுகிறது.