இலங்கை நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது பறந்த மர்ம ட்ரோன் விமானம்!
கொழும்பு: இலங்கை நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது மர்ம ட்ரோன் விமானங்கள் தொடர்ந்து பறப்பதால் பெரும் பீதி நிலவுகிறது. கடற்படையினர் ட்ரோன் விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியத போதும் அவை தப்பியதால் பதற்றம் நீடிக்கிறது.
இலங்கையில் காலூன்றியிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். கடந்த வாரம் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், ஹோட்டல்களை குறிவைத்து தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடத்தியது.
இதில் 47 பிஞ்சு குழந்தைகள் உட்பட 359 பேர் பலியாகினர். இந்த நிலையில் அம்பாந்துறையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த மறைவிடங்களில் ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் 15 பேர் பலியாகினர்.
அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சிறிய ரக ட்ரோன் விமானங்களும் கைப்பற்றப்பட்டன. ஈராக், சிரியா பாணியில் ட்ரோன்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதும் அம்பலமானது.
அவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள்தான்.. இலங்கையில் 15 பேர் பலியான சம்பவம்.. ஐஎஸ் பொறுப்பேற்பு!
இதனிடையே நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது மர்ம ட்ரோன் விமானங்கள் தொடர்ந்து பறப்பதாக கூறப்படுகிறது. அப்படி பறந்த விமானங்கள் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.